அமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை
நியூஜெர்சி: அமெரிக்காவில் சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவலி அதிகாரி ஶ்ரீரங்கா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இயல்பான ஒன்றாகவே தொடருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளையும் பெற்று வருகின்றனர்.

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி, சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரி அண்மையில் அதிபர் ஜோ பைடனால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான அனிதா ஆனந்த், பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த பெருமிதங்களுக்கு இடையே இந்தியர்கள் தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதுமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. நியூஜெர்சி மாகாணத்தில் பிளைன்ஸ்போரோ நகரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீரங்கா அரவப்பள்ளி வசித்து வந்தார்.
அமெரிக்காவில் மருந்து நிறுவனம் ஒன்றின் அதிகாரியாகவும் ஶ்ரீரங்கா பணியாற்றி வந்தார். பிலடெல்பியா நகரில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ரூ7.50 லட்சத்தை ஶ்ரீரங்கா வென்றார். இதனை கவனித்த கொள்ளையர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.
ஶ்ரீரங்கா பிளைன்ஸ்போரோ நகரில் வீட்டை சென்றடைந்த போதும் கொள்ளையர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். காரில் இருந்து ஶ்ரீரங்கா இறங்கிய போது அவரிடம் இருந்து பணத்தைப் பறிக்க கொள்ளையர்கள் முயன்றனர். ஆனால் கொள்ளையர்களுடன் ஶ்ரீரங்கா போராடினார்.
அப்போது திடீரென கொள்ளையர்கள் ஶ்ரீரங்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இது தொடர்பாக பிளைன்ஸ்போரோ போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ஜெகாய் ரீட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பிளைன்ஸ்போரோ நகரில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக ஶ்ரீரங்கா வசித்து வந்தார். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த வாரம் வட அமெரிக்கா நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் துலம் நகரத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர். அப்போது இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய பெண் ஒருவர் உட்பட 3 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகைய தொடர் துப்பாக்கிச் சூடுகள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சுற்றுலா பயணங்களை பாதிக்கும் என்கின்றனர் பயண ஏற்பாட்டாளர்கள்.












Click it and Unblock the Notifications