உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளை (சனிக்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை குறைத்து, தற்போது உருவாகியுள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை நிரந்தரமாக மாற்றவும், மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்கும் நோக்கில் இந்த முக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஈரான் - அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கியது பாகிஸ்தான் என்பதால் ஈரான் - அமெரிக்காவின் பெரிய தலைகளின் படைகள் மொத்தமாக இஸ்லாமாபாத்-க்கு வர உள்ளனர். இதற்காக மொத்த நகரமும் புது பொலிவு பெற்று வருகிறது என்றால் மிகையில்ல, இதோடு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்புக்காக பல கட்டுப்பாடுகளை தளர்த்தி தற்போது இந்த முக்கியமான கூட்டத்தை பாக். அரசு நடத்துகிறது.

அமெரிக்க குழு
இந்த வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவை அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமை தாங்குகிறார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இந்தக் குழுவில் முக்கிய இடம் பெற்றுள்ளனர். இந்த உயர் மட்டக் குழு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நேரடியாகப் பேசி தீர்க்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் குழு
ஈரான் தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஈரான் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளபடி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் இந்தக் குழுவை தலைமை தாங்குவார். வெளியுறவு அமைச்சர் அராக்சியும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபாஃப் ஈரான் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பவர். போர் காலத்தில் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்த முக்கிய நபராகவும் இருந்தார்.
ஹார்முஸ் தான் முக்கியம்
இந்த பேச்சுவார்த்தையில் மையபுள்ளியாக இருப்பது ஹார்முஸ் ஜலசந்தி. கடந்த சில வாரங்களாக ஈரான் இந்த நீர்வழியை முடக்கி வைத்திருந்ததால் உலக எண்ணெய் சந்தை பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த வழித்தடத்தை மீண்டும் திறப்பது அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படை பகுதியாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் இந்த வழியாக செல்லும் கப்பல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நூற்றுக்கணக்கான கப்பல்கள் பெர்சியன் வளைகுடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கப்பல் ஊழியர்கள் இன்னும் இக்கப்பல்களில் சிக்கியுள்ளனர். இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டால் உலக எண்ணெய் விலை ஸ்திரத்தன்மை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் புது விசா வசதி
பாகிஸ்தான் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பாகிஸ்தான் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் கூறுகையில், 'இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை 2026-க்காக வரும் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வருகை விசா (Visa on Arrival) வழங்கப்படும். அனைத்து விமான நிறுவனங்களும் இவர்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்றார். இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தைகளை சீராக நடத்த உதவும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications