டிரம்ப் மீண்டும் வென்றால் கடவுள்தான் எங்களை காப்பாத்தனும்.. உலகத்துக்கு பேரழிவு- பாலஸ்தீன பிரதமர்
ஜெருசலேம்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிபர் டொனால் டிரம்ப் வெற்றி பெற்றால் கடவுள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்; அவர் மீண்டும் வெற்றி பெற்றால் இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கே பேரழிவுதான் என்று பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்தாயே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் வேட்பாளராக மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் - ஜோ பிடன் களத்தில் இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் யார்.. 1984 முதல் கரெக்டாக கணிக்கும் பேராசிரியர்.. இப்போ என்ன சொன்னார் தெரியுமா?
அனல் பறக்கும் விவாதங்கள்
அனல் பறக்கும் நேரடி விவாதங்களுடன் அமெரிக்கா அதிபர் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தலிபான்கள் எதிர்பார்ப்பு
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார்; அவர் இம்முறை வெல்லும்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் முழுமையாக வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது தலிபான்கள் இயக்கம்.
பாலஸ்தீன பிரதமர் கருத்து
ஆனால் பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்தாயே வேறுவிதமான கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் பாலஸ்தீனர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். டிரம்ப்பின் 2-வது வெற்றி மிகப் பெரிய பேரழிவைத்தான் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
டிரம்ப்க்கு எதிர்ப்பு ஏன்?
அண்மையில் அரபு நாடுகளுக்கும் பாலஸ்தீனத்தின் பரம வைரியான இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவுகளை ஏற்படுத்தியவர் டிரம்ப். இதுநாள் வரை பாலஸ்தீனத்தின் உரிமை போருக்கு ஆதரவாக இருந்த அரபுநாடுகளை அப்படியே இஸ்ரேல் பக்கம் தள்ளிவிட்டவர் டிரம்ப். இதனால் பாலஸ்தீனர்கள் இந்த பூமிப்பந்தில் தனித்துவிடப்பட்டவர்களாக உள்ளனர். இதனால்தான் பாலஸ்தீன பிரதமர் இந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.