நீங்க நினைப்பது போல அல்ல.. ஈரானிடம் எங்களுக்கு வேண்டியது இதுதான்! உடைத்து பேசிய அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, அந்நாட்டு அதிகாரிகளுடன் சமீபத்தில் அமெரிக்க தூதர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனையடுத்து தற்போது செய்தியாளர் சந்திப்பில், "ஈரான் யுரேனியம் செறிவூட்டலை 3.67% கீழ் கொண்டு வந்தால் மட்டும் போதும்" என்று கூறியுள்ளார்.
ஈரானின் அணு கட்டமைப்பு தொடர்பாக அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைக்கு இதுதான் காரணமாக இருக்கிறது.

அமெரிக்காவின் ஒப்பந்தம்
உலக நாடுகளை வரி மூலம் அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, ஈரானை அணு ஆயுத விவகாரத்தில் மிரட்டி வருகிறது. ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான பஞ்சாயத்து காலங்காலமாக இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்த விவகாரத்திற்கு உலக நாடுகள் தீர்வை கண்டன. JCPOA என்கிற ஒப்பந்தம் 2015ல்தான் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஈரான், சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இருந்தன.
யுரேனியம் செறிவூட்டல்
ஈரானை அணு ஆயுதம் உருவாக்க விடக்கூடாது என்பதே இதன் நோக்கம். எனவே ஏற்கெனவே ஈரான் மீது ஏராளமான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. தடைகளை எதிர்த்து ஈரானும் சண்டை செய்து வந்தது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவே JCPOA ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும். ஆனால், ஈரான் தனது யுரேனியம் செறியூட்டலை 3.67% க்கு கீழ் வைத்திருக்க வேண்டும்.
JCPOA ஒப்பந்தம்
ஈரானும் இதற்கு ஒப்புக்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் ஈரான் தயாரிப்புகளை மேலை நாடுகள் ஏற்றுக்கொண்டன. குறிப்பாக ஈரானிலிருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் உலகம் முழுவதும் விற்பனை ஆனது. இருப்பினும் அமெரிக்காவால் இந்த விவகாரத்தை தாங்க முடியவில்லை. குறிப்பாக 2018ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, JCPOA ஒப்பந்தம் ஓர் ஏமாற்று வேலை. எனவே, நாங்கள் அதிலிருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்தார். மட்டுமல்லாது ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்தார்.
ஈரானின் வேலை
அப்புறம் என்ன ஈரான் ஃபார்முக்கு திரும்ப தொடங்கியது. "நாம் ஒப்பந்தத்தில் இருந்தாலும் கூட நமக்கு நியாயம் கிடைக்கவில்லை" என்று கூறிய ஈரான், யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக 3.67 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும் தற்போது 60 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது.
அணு ஆயுதம்
இப்போது இந்த விவகாரத்தை அமெரிக்கா சர்வதேச அளவில் பெரிய விஷயமாக ஆக்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என்று பேச தொடங்கியிருக்கிறது. ஈரான் யுரேனியம் செறிவூட்டலை குறைக்க வேண்டும் இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரும் என எச்சரித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு 5% செறிவூட்டினால் போதுமானது. அதேநேரம் மருத்துவ துறைக்கு 20% செறிவூட்டினால் போதுமானது. ஆனால் 90% செறிவூட்டினால் அதை அணுஆயுதமாக பயன்படுத்த முடியும்.
மருத்துவ பயன்பாடு
விஷயம் என்னவெனில், 60 சதவிகிதம் யுரேனியத்தை செறிவூட்டினால் அதை 90% ஆக உயர்த்துவது எளிது. எனவேதான் அமெரிக்கா அஞ்சுகிறது. ஆனால், தாங்கள் முழுக்க முழுக்க மருத்துவ பயன்பாட்டுக்குதான் யுரேனியத்தை செறிவூட்டுகிறோம் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
இது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த, விட்காஃப் என்பவரை தூதராக அமெரிக்கா நியமித்திருக்கிறது. விட்காஃப் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த 13ம் தேதி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் நேற்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த விட்காஃப்,
பேச்சுவார்த்தை தான் தீர்வு
"யுரேனியம் செறிவூட்டம் செய்ய ஈரானை அனுமதிக்கலாம். ஆனால் அது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்கும். அதே நேரம் கண்காணிப்புகளும் அதிகமாக இருக்கும். போர் வேண்டாம், பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என டிரம்ப் நம்புகிறார். ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பை முழுமையாக அழிப்பது எங்கள் நோக்கம் கிடையாது. ஆனால், செறிவூட்டலை 3.67%க்கு கீழ் கொண்டுவருவதுதான் எங்கள் நோக்கம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications