ஒரு டாலர் கொடுங்க... நாங்க 2 டாலர் தர்றோம்! - தமிழக அரசின் திட்டத்துக்கு நிதி திரட்டும் யுஎஸ் தமிழர்
டல்லாஸ்(யு.எஸ்): தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லும் தமிழக குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவளிக்க முன் வந்துள்ளார்கள்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வைக்கும் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களுக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அமல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
பயிர்
அந்த வகையில், 'பயிர்' என்ற கிராம முன்னேற்றத்திற்கான தொண்டு நிறுவனம், 'குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் அதனை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். சில பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தையும், செயல்படுத்தப்பட்ட முறையையும் அறிந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது, இதனை மாவட்டம் முழுவதும் கொண்டுவர ஆவன செய்தார்.
அவருடைய முயற்சியாலும் 'பயிர்' செந்தில் கோபாலனின் உறுதுணையாலும், தமிழக திட்டக்குழுவின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி, மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.
ஊட்டச்சத்து உணவு தானியங்கள்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் 500 கலோரிகள் அளவுள்ள சத்து உருண்டைகள் கொடுக்கப்படுகிறது. கேழ்வரகு, எள், நிலக்கடலை, பருப்பு, வெல்லம் ஆகியவற்றை கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு மற்றும் இரும்புச் சத்துகள் குழந்தைகளுக்கு சரிவிகிதத்தில் கிடைக்கின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 26000 குழந்தைகளுக்கு முதல் கட்டமாக இது செயல் படுத்தப்படுகிறது.
’பயிர்’ தன்னார்வ தொண்டு நிறுவனம்
ஊட்டச்சத்து திட்டத்தை பயிர் தொண்டு நிறுவனம் முன்னின்/றி செயல்படுத்தி, கண்காணித்து, திட்ட பலன்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 75 களப்பணியாளர்கள் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்கள். இந்த குழுவுக்கான ஊதியம், போக்குவரத்து நடைமுறை செலவுகளுக்காக சுமார் 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை
அமெரிக்காவில் பல்வேறு தமிழ்ப் பணிகளையும் சமூகப்பணிகளையும் ஆற்றிவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையினர் 'பயிர்' தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த திட்ட நடைமுறைச் செலவுகளுக்காக, அமெரிக்கத் தமிழர்களிடம் நிதி திரட்ட முன் வந்துள்ளார்கள். 'உடல் திடகாத்திரம் தான் திடமான எண்ணங்களின் அடிப்படை' என்ற நம்பிக்கையில், தமிழக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் இந்த அரிய திட்டத்திற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்ய விரும்புவதாக அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு டாலர் கொடுங்க... நாங்க இரண்டு டாலர்கள் தர்றோம்!
ஊட்டச்சத்து திட்ட செயல்பாட்டிற்காக முதல் தொகையாக ஆயிரம் டாலர்களை 'பயிர்' நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்கள். மேலும், இந்த திட்டத்திற்கு நிதியுதவியளிக்கும் நன்கொடையாளார்களின் தொகைக்கு ஈடான தொகையை அறக்கட்டளையின் நிதியிலிருந்தும் தர உள்ளார்கள். அதாவது, ஒருவர் 100 டாலர் நன்கொடை வழங்கினால், சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 100 டாலர் சேர்த்து, 200 டாலர்கள் 'பயிர்' தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
முதல்வருக்கு பாராட்டு
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் வேலு ராமன் கூறுகையில், "தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்து, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்திச் செய்யும் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் முதல்வர் நிறைவேற்றுவார் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கத் தமிழர்களின் 6 லட்சம் ரூபாய் இலக்கு
செந்தில் கோபாலன், அமெரிக்காவில் வேலையை விட்டு விட்டு கிராம முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, 'பயிர்' அமைப்பை நிறுவியுள்ளார், தேனூர் கிராமத்தில் தங்கி மிகவும் எளிமையாக வாழ்ந்து வருவதுடன், கிராம முன்னேற்றத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
அமேஸிங் இந்தியன்
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் ‘Amazing Indians' நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப் பட்டுள்ளார். முனைப்புடன் அவர் செயலாற்றி வரும், பெரம்பலூர் மாவட்ட 'குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம்' வெற்றி பெறும் போது தமிழகம் முழுவதும், முதல்வரால் இதே திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளிலிருந்து நிவர்த்தி அடைவார்கள். ஆகையால் பயிர் அமைப்பின் திட்ட நடைமுறைச் செலவுகளுக்கான பத்தாயிரம் டாலர் (ரூ.6 லட்சம்) நிதியை நன்கொடையாக அளிக்க அமெரிக்கத் தமிழர்கள் தயவுகூர்ந்து முன்வரவேண்டும் என வேலு ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலதிக விவரங்களை http://pltamil.com/Payir.html என்ற இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.