3 வயது சிறுவன் சுட்டதில் தந்தையின் இடுப்பை துளைத்து கர்ப்பிணி தாய் மீது பாய்ந்த குண்டு
அல்புகெர்கு: அமெரிக்காவில் கைத்துப்பாக்கியை வைத்து விளையாடியபோது 3 வயது சிறுவன் தற்செயலாக சுட்டதில் அவரின் தந்தை மற்றும் கர்ப்பமாக உள்ள தாய் மீது குண்டு பாய்ந்தது.
அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாநிலத்தில் தம்பதிகள் தங்களின் 3 வயது மகன், 2 வயது மகளுடன் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அல்புகெர்கு நகரில் உள்ள அந்த ஹோட்டலில் தங்கியபோது சிறுவன் தனது தாயின் கைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து தற்செயலாக சுட்டதில் சிறுவனின் தந்தையின் இடுப்பில் பாய்ந்த குண்டு அவரின் உடலை துளைத்து அருகில் இருந்த அவரின் கர்ப்பமான மனைவியின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவனின் தந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சிறுவனின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி புளோரிடா மாநிலத்தில் தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாடியபோது குண்டு பாய்ந்து 2 வயது சிறுவன் பலியானான். அதற்கும் முன்பு மிசௌரியில் 5 வயது சிறுவன் சுட்டதில் அவரின் 9 மாத தம்பி பாப்பா பரிதாபமாக பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாடி சிறுவர்கள் பிறரை சுடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.