ஆபீஸ் டாய்லெட்டில் குழந்தையை பெற்று பிளாஸ்டிக் பையில் போட்டு கொன்ற பெண்
மிஷிகன்: அமெரிக்காவில் 26 வயது பெண் ஒருவர் அலுவலக கழிவறையில் ஆண் குழந்தையை பெற்று அதை பிளாஸ்டிக் பையில் போட்டு மூடியதில் குழந்தை பலியானது.
அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள வெயின் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் கிம்பர்லி பப்பாஸ்(26). அவர் கடந்த மார்ச் மாதம் அலுவலகத்திற்கு சென்ற இடத்தில் பிரசவ வலி வந்துள்ளது. இதையடுத்து அவர் கழிவறைக்கு சென்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் அறுத்து குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு சீல் வைத்துவிட்டார். அந்த பையை அவர் தனது மேஜையில் உள்ள அறைக்குள் வைத்துவிட்டார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர். கழிவறையில் ஒரே ரத்தமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரணை செய்தபோது கிம்பர்லியின் மேஜையில் பிளாஸ்டிக் பையில் குழந்தை இருந்ததை கண்டுபிடித்தனர். தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சுத் திணறி பலியானது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கிம்பர்லியை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு 9 முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
இந்த வழக்கை விசாரித்த வெயின் கவுன்ட்டி நீதிமன்றம் வரும் 26ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications