ரொனால்டோவை தொடர்ந்து.. பிரஸ் மீட்டில் மற்றொரு கால்பந்து வீரர் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ!
ரோம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து மற்றொரு பிரபலமான பிரெஞ்சு கால்பந்து வீரர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பீர் பாட்டிலை அகற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.
யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், போட்டிக்கு முன்னதாக போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
தனது மேஜையில் தனக்கு முன்னால் இரண்டு கோக்க கோலா பாட்டில்கள் இருப்பதை பார்த்த கிறிஸ்டியானோ ரொனால்டோ அதனை உடனடியாக அகற்றினார். அத்துடன் நின்று விடாமல் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடியுங்கள் என்று கூறினார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த செயல் உலகம் முழுவதும் பேசும் பொருளாகி விட்டது.

மற்றோரு வீரரின் சம்பவம்
அத்துடன் அவர் இரண்டே இரண்டு கோக்க கோலா பாட்டில்களை அகற்றியதன் மூலம் அந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரேடியாக சரிந்து சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து மற்றொரு பிரபலமான கால்பந்து வீரர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பீர் பாட்டில் அகற்றினார்
பிரெஞ்சு கால்பந்து வீரரான பால் போக்பாதான் அவர். இன்று போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் பால் போக்பா. அப்போது மேஜையில் தனக்கு முன்னால் Heineken பீர் பாட்டில் இருப்பதை பார்த்தார். இதனை தொடந்து உடனடியாக அந்த பாட்டிலை அகற்றினார் பால் போக்பா. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மது அருந்துவதில்லை
பால் போக்பா இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருபவர். இஸ்லாம் மது அருந்துவதை தடை செய்வதால், மதத்தை பின்பற்றி பால் போக்பா இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தான் மது அருந்துவதில்லை என்று பால் போக்பா ஏற்கனவே கூறியுள்ளார். ஐரோப்பிய கால்பந்து தொடரில் பலவிதமான ஸ்பான்சர்கள் உள்ளனர். அதில் மதுபான நிறுவனமான Heineken நிறுவனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications