ரஷ்ய தலைநகரை நெருங்கும் "வாக்னர்" படை.. வேறுவழியின்றி சாலைகளை தகர்க்கும் புதின் ராணுவம்! பரபர
மாஸ்கோ: ரஷ்யாவின் தனியார் ராணுவமான வாக்னர் கூலிப்படை இப்போது மாஸ்கோவை நெருங்கி வருகிறது. இது ரஷ்ய அதிபர் புதினுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
ரஷ்யா இப்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் இருக்கிறது. ஒரு பக்கம் உக்ரைன் போர் பல மாதங்களாக நடந்து வருகிறது. கடந்தாண்டு தொடங்கிய உக்ரைன் போர் இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது.
இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் வாக்னர் குழுவும் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அங்கே உள்ள தனியார் ராணுவமான வாக்னர் இப்போது ரஷ்ய நகரங்களை முற்றுகையிட ஆரம்பித்துள்ளது.
ரஷ்யாவில் என்ன நடக்கிறது: வாக்னர் குழுவை இதற்கு முன்பு ரஷ்யா பல நேரங்களில் பயன்படுத்தியுள்ளது. சிரியா, ஆப்பிரிக்க எனப் பல நாடுகளில் ரஷ்யா இந்த வாக்னர் குழுவைப் பயன்படுத்தியுள்ளது. வாக்னர் குழு ரஷ்ய சட்டத்திற்குக் கட்டுப்படாது என்பதால் பல வெளிநாட்டு மிஷன்களுக்கு ரஷ்யாவே இந்த வாக்னர் குழுவைப் பயன்படுத்தியுள்ளது.

வாக்னர் குழு இதுவரை ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது. இதனால் ரஷ்ய பாதுகாப்புத் துறையே அவர்கள் ஆயுதங்களையும் சப்ளை செய்தது. இப்போது நடந்து வரும் உக்ரைன் போரில் கூட கடந்த ஓராண்டாக இரு தரப்பும் இணைந்தே சண்டையிட்டு வந்துள்ளது.
முற்றுகை: இந்தச் சூழலில் தான் ரஷ்யா ராணுவத்திற்கு எதிராகவே அவர்கள் திரும்பியுள்ளனர். முதலில் அவர்கள் ரஷ்யாவில் எல்லையில் அமைந்துள்ள ரோஸ்டோவ் நகரை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே ரஷ்ய ராணுவம் இப்போது லிபெட்ஸ்க் நகருக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என லிபெட்ஸ்க் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: வாக்னர் குழு முதலில் முற்றுகையிட்ட நகருக்கு வடக்கே அந்த லிபெட்ஸ்க் அமைந்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வீடுகளிலேயே இருக்குமாறும் லிபெட்ஸ்க் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே வாக்னர் குழுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வாக்னர் படைகள் லிபெட்ஸ்கிற்குள் நுழைந்துள்ளதாக அம்மாகாண ஆளுநர் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர்கள் மாஸ்கோவிற்கு அருகே வந்துள்ளனர். லிபெட்ஸ்கிருந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ வெறும் 300 கி.மீ தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நாட்களில் வாக்னர் குழு மாஸ்கோவை நோக்கியோ முன்னேறும் எனத் தெரிகிறது.
ரஷ்யாவில் பரபர சூழல்: முன்னதாக, வாக்னர் குழுவின் நடமாட்டம் காரணமாக மாஸ்கோவிற்கு தெற்கே 400 கிமீ தொலைவில் உள்ள வோரோனேஜ் பகுதியின் எல்லையில் மாஸ்கோவை இணைக்கும் M-4 நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக ஆளுநர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மாஸ்கோ நகருக்கு அவர்கள் வராமல் இருக்க லிபெட்ஸ்க்- மாஸ்கோ நகரை இணைக்கும் சாலைகளை ரஷ்ய ராணுவமே தகர்த்துள்ளது.
வாக்னர் கூலிப்படை தொடர்ந்து மாஸ்கோவை நோக்கி முன்னேறி வரும் நிலையில், அங்கே கூடுதல் ராணுவத்தை ரஷ்யா இறக்கியுள்ளது. ஏற்கனவே வாக்னர் குழுவைத் தேச துரோகிகள் என புதின் விமர்சித்துள்ளார். மேலும், ரஷ்யா நாட்டியது துரோகம் இழைத்தவர்களை நிச்சயம் தண்டிப்போம் என்றும் இதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் புதின் கூறியுள்ளார். இதனால் அங்கே உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications