போர் பதற்றம்.. உக்ரைனில் இரவு நேர ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - வெளியே நடமாட தடை
உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும் என மேயர் அறிவித்துள்ளார். ஊரடங்கின் போது நடமாடுபவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார்.
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி28ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும். ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் என கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா படையெடுப்பால் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் கடும் போர் பதற்றம் காணப்படுகிறது. மூன்றாவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இதையடுத்து போர்க்கால அவசர நடவடிக்கையாக கீவ் நகரம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார். நிர்வாகம், ராணுவ நடவடிக்கை மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவின் போது பொது போக்குவரத்து இயங்காது என்றும் மெட்ரோ நிலையங்களை தங்குமிடங்களாக பொதுமக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் என்று கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவினால் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் என கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.