துபாயில் நடந்த வேவ் ரெசொனன்ஸ் இவென்ட்ஸின் 8வது ஆண்டு விழா
துபாய்: வேவ் ரெசொனன்ஸ் இவென்ட்ஸின்(Wave resonance events)எட்டாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 5ம் தேதி அன்று மாலை துபாயில் நடைபெற்றது.
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷீத் கலையரங்கில் விழா சிறப்பாக நடந்தது. மாலை 6.30 மணியளவில் கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய விழா இரவு 10.30 மணி வரை உற்சாகம் கரை புரள, கலையாத பெருந்திரளுடன் விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக திரைப் பிரபலங்கள் தீபம் ஜெயசுதா, ரஜினி, நாரா ரோஹித் மற்றும் குச்சிப்புடி நாட்டியக் கலைஞர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் துளசி தாஸ் பஜன், ஜகன் நாத காரகா, தரானா, நடனம், குழந்தைகளின் மீன் நடனம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றன.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் இசைப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று விழா பார்வையாளர்களின் தொடர் கரவொலியுடன் நடந்தது. விழாவிற்கான அனுசரணை செய்து உதவியவர்கள் சிறப்பு செய்து கவுரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விருந்தினர்கள் தமது சிறப்புரைகளில் வேவ் ரெசொனன்ஸ் இவென்ட்ஸ் மென்மேலும் வளர்ந்து பல வெற்றிகள் அடைய வாழ்த்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாபு, எம்.டி. கீதா ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கவனித்துக் கொண்டனர். கராமா பிரபாஸ் உணவகம் இரவு உணவு உபசரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.