எழுந்து நின்று வரவேற்ற எம்.பி.க்கள்! "விடமாட்டோம்" ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கர்ஜித்த உக்ரைன் அதிபர்
கீவ் : எங்களை யாராலும் தகர்க்க முடியாது, நாங்கள் வலிமையானவர்கள் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. முக்கிய நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷ்யா.

ஐரோப்பா நாடாளுமன்றம்
இந்நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டியுள்ளனர். முன்னதாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா இன்று தன்னுடைய ட்விட்டரில் ''உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு'' என்ற தலைப்பில் விவாதம் ஐரோப்பா நாடாளுமன்றத்தில் நடக்கும் என்றும், அதைத்தொடர்ந்து ரஷ்யா போர் தாக்குதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதையடுத்து உக்ரைன் அதிபர் ஐரோப்பிய நாடாளுமன்றம் சென்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

வலிமை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ''எங்கள் நாட்டுக்காக போராடுகிறோம். எங்கள் நாட்டில் பல நகரங்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சுதந்திரத்துக்காக போராடுவோம். எங்களை யாராலும் தகர்க்க முடியாது, நாங்கள் வலிமையானவர்கள். உக்ரைன் கொடி அணிந்து இங்கு பலரும் வந்துள்ளார்கள். அதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உக்ரைனுக்கு பலர் ஆதரவாக இருக்கிறார்கள். உக்ரைன் தொடர்ந்து போராடும்'' என்று பேசியுள்ளார்.

போர்
போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷ்யா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மீண்டும் பேச்சுவார்த்தை
போர் தாக்குதலை குறைத்திருந்த ரஷ்யா, தற்போது தீவிரமாக தாக்கி வருகிறது.
உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், 2-வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ராக்கெட் மூலம் கார்கீவ் நகரை ரஷ்யா தாக்கி வருகிறது. குடியிருப்புகள் மீது ராக்கெட் குண்டு வீச்சு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications