"தடை விதிப்பதில் தவறு இல்லை.!" கர்நாடகாவைப் போலவே எழுந்த ஹிஜாப் சர்ச்சை! ஐரோப்பிய கோர்ட் தீர்ப்பு
பிரஸ்ஸல்ஸ்: ஹிஜாப் தடை கர்நாடகாவில் மட்டுமில்லை ஐரோப்பாவிலும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கோர்ட் தீர்ப்பை அளித்து உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை இந்தாண்டு எழுந்தது. பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

மாறுபட்ட தீர்ப்பு
கர்நாடக ஐகோர்ட் தனது தீர்ப்பில் இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அத்தியாவசியமானது இல்லை என்றும், கல்வி நிறுவனங்களில் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

ஐரோப்பா
இதற்கிடையே ஐரோப்பாவிலும் ஹிஜாப் விவகாரம் எழுந்தது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம் பெண் ஒருவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளார். அப்போது அந்த பெண் வேலை செய்யும் நிறுவனத்தின் ஹிஜாப் உடையை அணியக் கூடாது என்று அந்த நிறுவனம் கூறியதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் தனக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாக நினைத்து அந்தப் பெண் வழக்கு தொடர்ந்தார்.

பெல்ஜியம்
முதலில் பெல்ஜியம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. அனைவருக்கும் ஒரே விதி என்ற neutrality விதி காரணமாகவே தங்கள் வளாகத்தில் தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்ட அனைத்து விதமான தலையை மூடும் உடைகளுக்கும் அனுமதி இல்லை என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த பெல்ஜியம் நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டது.

பாகுபாடு இல்லை
இந்த வழக்கை லக்சம்பேர்க்கை மையமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றி நீதிமன்றம் விசாரணை செய்தது. அதில் நேரடி பாகுபாடு இல்லாத வரை தடை விதிப்பதில் தவறு இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள், "மதம் சார்ந்த அல்லது ஆன்மீக அடையாளங்கள் அனைவருக்கும் தெரியும்படி அணிவதைத் தடை செய்யும் ஒரு பொதுவான விதி அனைத்து ஊழியர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் பொருந்தும் என்றால் அது பாகுபாடு காட்டும் விதியாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ்
neutrality விதி காரணமாக ஐரோப்பாவில் பல்வேறு நிறுவனங்களும் தலை மூடும் அனைத்து விதமான உடைகளையும் தடை செய்து வருவதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். ஐரோப்பாவின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடாக பிரான்ஸ் உள்ளது. அங்குக் கடந்த 2004ஆம் ஆண்டிலேயே அரசுப் பள்ளிகளில் தலை மூடும் அனைத்து விதமான உடைகள் தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications