ஹவானா சிண்ட்ரோம் பரவுகிறது.. வியட்நாம் வராதீங்கா.. கமலா ஹாரிஸுக்கு வந்த எச்சரிக்கை.. திரில் சம்பவம்!
ஹனோய்: வியட்னாமில் ஹவானா சிண்ட்ரோம் பரவுவதாக வெளியான செய்திகளை அடுத்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்னாம் பயணம் சில மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்கர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தற்போது ஆசிய நாடுகளான சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஆசிய நாடுகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், உறவை பலப்படுத்தும் வகையிலும் இவரின் இந்த பயணம் அமைந்துள்ளது. முக்கியமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வெற்றி காரணமாக அமெரிக்கா மீதான நம்பிக்கையை பல்வேறு நாடுகள் இழந்துள்ளன.
தாலிபான்களின் வெற்றி ஒரு வகையில் சீனா, ரஷ்யாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆசிய நாடுகள் இடையே நட்பை பலப்படுத்தும் வகையிலும் உறவை புதுப்பிக்கும் வகையிலும் கமலா ஹாரிஸின் இந்த திடீர் பயணம் அமைந்துள்ளது. உலக அரசியல் பெரிய அளவில் மாறி வரும் நிலையில் கமலா ஹாரிஸின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

பயணம்
முதலில் சிங்கப்பூர் சென்ற கமலா ஹாரிஸ் இந்த பயணத்தில் அடுத்த கட்டமாக வியட்னாம் செல்ல இருந்தார். கம்யூனிச நாடான வியட்னாமிற்கு இவர் செல்வது அதிக அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. முக்கியமாக வியட்னாம் சீனா இடையிலான எல்லை மோதல் காரணமாக இந்த பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றது. ஆனால் கமலா ஹாரிஸ் வியட்னாம் விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 3 மணி நேரம் பயணம் ஒத்திவைக்கப்பட்ட பின் மீண்டும் அவர் வியட்னாம் செல்வது உறுதி செய்யப்பட்டது.

வியட்னாம்
வியட்னாமில் ஹவானா சிண்ட்ரோம் பரவுவதாக வெளியான செய்திகளை தொடர்ந்து இந்த காலதாமதம் ஏற்பட்டது. ஹவானா சிண்ட்ரோம் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கமலா ஹாரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது. அதோடு வியட்னாம் அரசு இந்த ஹவானா சிண்ட்ரோம் குறித்து உறுதியான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக தகவலை உறுதிப்படுத்தும் வரை கமலா ஹாரிஸ் வியட்னாம் செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் வியட்னாமில் யாருக்கும் ஹவானா சிண்ட்ரோம் பரவவில்லை உறுதி செய்யப்பட்ட பின் கமலா ஹாரிஸ் வியட்னாம் புறப்பட்டார்.

என்ன சிண்ட்ரோம்
ஹவானா சிண்ட்ரோம் என்பது 2016ல் கியூபாவில் அமெரிக்க தூதகரத்தில் இருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகும். சில கனடா அதிகாரிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. 2018ல் சீனாவில் இருந்த சிஐஏ அதிகாரிகளுக்கும், அமெரிக்க உளவாளிகளுக்கும் கூட இந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு என்பது மிகவும் விசித்திரமானது. திடீரென தலைவலி, காதில் வித்தியாசமான சத்தம் கேட்பது, மோசமாக அதிக ஒலியில் காதுக்குள் சத்தம் கேட்பது, யாரோ நம்மை கட்டிப்போட்டது போன்று உணர்வது, சிலருக்கு பைத்தியம் பிடித்தது போன்ற உணர்வு, மன ரீதியான பிரச்சனை, கை, கால் நடுக்கம் என்று பல்வேறு பிரச்சனைகள் சேர்ந்து ஏற்படுவதுதான் ஹவானா சிண்ட்ரோம்.

மூளை
முக்கியமாக சிந்திக்க முடியாத அளவிற்கு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு ஹவானா சிண்ட்ரோம் காரணமாக மூளையில் சிறிய காயங்கள் கூட ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் என்னவென்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு ரேடியோ கதிர்கள் காரணமாக இருக்கலாம், அமெரிக்கா பயன்படுத்தும் உளவு கருவிகளில் இருந்து வரும் மைக்ரோ அலைகள் காரணமாக இருக்கலாம் என்று பல்வேறு ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா
அதே சமயம் அமெரிக்கர்களுக்கும் அமெரிக்காவின் நட்பு நாடான கனடாவில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த ஹவானா சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதனால் இதற்கு பின் ரஷ்யா அல்லது சீனா இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நாடுகள் தொடுக்கும் மன ரீதியாக தாக்குதலாக இது இருக்கலாம், ரேடியோ கதிர்கள் மூலம் மூளையை பாதிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பாதிப்பு
ஆனால் இந்த ஹவானா சிண்ட்ரோமிற்கு என்ன காரணம் என்று இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை. இதனால் சில அமெரிக்க அதிகாரிகள் கடந்த 4 வருடமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் சில வாரங்கள் மட்டும் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தனர். இந்த நிலையில்தான் வியட்னாமில் ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலால் கமலா ஹாரிஸின் பயணம் சில நிமிடம் தள்ளிப்போனது.












Click it and Unblock the Notifications