புஸ்வானமான ஈரான் பிளான்.. 400 ஏவுகணை ஏவியும் அசராத இஸ்ரேல்.. காரணமே இதுதான்! ‛அயன்டோம்’ தெரியுமா?
ஜெருசலேம்: காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை தொடர்ந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. சுமார் 400 ஏவுகணைகளை ஈரான், இஸ்ரேல் மீது ஏவியது. ஆனால் இந்த தாக்குதலில் இருந்து இஸ்ரேல் பேரழிவில் இருந்து தப்பித்து உள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தப்பிக்க முக்கிய காரணம் அங்குள்ள ‛அயன்டோம்' அமைப்பாகும். இந்த ‛அயன்டோம்' என்றால் என்ன? அது எப்படி செயல்படும்? ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தப்பித்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் என்பது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போராக மாறியது. ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகும். இதனால் போரை கைவிட இஸ்ரேலுக்கு ஈரான் வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் அதனை கண்டுக்கொள்ளவில்லை. தற்போது இந்த போர் தொடங்கி ஓராண்டு நெருங்கி வருகிறது.

இதனால் கோபமான ஈரான் லெபனானில் செயல்பட்டு வரும் தனது ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா மூலம் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து பேஜர் தாக்குதல், வாக்கி டாக்கி தாக்குதலை தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இதில் இஸ்ரேலின் முக்கிய படை தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதியும், தலைவருமான ஹசன் நஸ்ருல்லாவும் கொல்லப்பட்டுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்துள்ள ஈரான், இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. காசா மீதான போர் மற்றும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ள நிலையில் முதல் முறையாக ஈரான் இந்த தாக்குதலை நடத்த தொடங்கி உள்ளது. இஸ்ரேல் என்பது தனது எல்லைகளை பாலஸ்தீனத்தின் காசா, லெபனான், சிரியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுடன் தான் பகிர்ந்து வருகிறது. ஈரானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான தொலைவு என்பது 2,300 கிலோமீட்டராகும்.
அதோடு ஈரான் வான்வழி தாக்குதலுக்கு நடத்த வேண்டும் என்றால் ஈராக், ஜோர்டான் அல்லது சிரியாவை தாண்டி தான் இஸ்ரேலை தொட முடியும். இது அவ்வளவு சுலபமானது இல்லை. இதனால் தான் ஈரான் ஹிஸ்புல்லா மூலம் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்தது. ஆனால் இப்போது ஹிஸ்புல்லாவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதால் ஈரான் நேரடியாக களமிறங்கி உள்ளது. இதுபற்றி அமெரிக்கா நேற்று எச்சரிக்கை செய்தது.

அடுத்த 12 மணிநேரத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று இஸ்ரேலுக்கு அலர்ட் செய்தது. அமெரிக்கா கூறியது போலவே நேற்று இரவு ஈரானில் இருந்து 400 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. வானில் தீப்பிழம்பாக ஏவுகணைகள் பறந்து இஸ்ரேலை நோக்கி வந்தன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் ஈரானின் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ஈரான் நேரடியாக களமிறங்கி உள்ள நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக படைகளை களமிறக்கி உள்ளது. இதற்கான உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் 400 ஏவுகணைகள் ஏவியும் கூட ஈரானின் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தப்பிக்க முக்கிய காரணம் அந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் ‛அயன்டோம்' எனும் பாதுகாப்பு கவசமாகும். இந்த ‛அயன்டோம்' என்பது இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை கண்டறிந்து இடைமறித்து தாக்கும் பணியை செய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் இஸ்ரேலின் ‛அயன்டோம்' ஈரானின் ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கி அழித்தது. இதனால் தான் இஸ்ரேல் பேரழிவில் இருந்து தப்பித்துள்ளது.
இந்த ‛அயன்டோம்' என்பது ஏவுகணை தாக்கும் மொபைல் அமைப்பு, ஏவுகணைகளை அழிக்கும் பாதுகாப்பு அமைப்பு , ஏவுகணைகளுக்கு எதிரான அமைப்பு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை 2.4 மைல் முதல் 43 மைல் (அதாவது 4 முதல் 70 கிலோமீட்டர்) தொலைவிலேயே கணித்து அழிக்கும் வல்லமை கொண்டது என்று Congressional Research Service-யின் அறிக்கை சொல்கிறது. ஏவுகணைகள், ட்ரோன்களை கண்காணித்து இடைமறித்து தாக்குதல் நடத்தி வெடிக்க செய்யும் திறன் இதற்கு உண்டு. அதேபோல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறனும் இந்த ‛அயன்டோம்' அமைப்புக்கு உண்டு.

இந்த ‛அயன்டோம்' என்பது ரேடார்களின் உதவியுடன் ஏவுகணைகளை கண்காணித்து தாக்கி அழிக்கும் பேட்டரிகளின் தொகுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்ரேலின் ரஃபேல் பாதுகாப்பு அமைப்புடன் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான ரேதியானின் தகவலின்படி ஒவ்வொரு ‛அயன்டோம்' அமைப்பிலும் பேட்டரிகள் வரிசைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். இது ரேடார் மற்றும் தரைக்கட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு பேட்டரியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 4 இஸ்ரேல் ஏவுகணைகள் இருக்கும். அந்த வகையில் பார்த்தால் ஒரு ‛அயன்டோமில்' 20 ஏவுகணைகள் வரை இருக்கும். ‛அயன்டோமின்' ரேடார்கள் எதிரிகளின் ஏவுகணைகள் வரும் திசையை கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அளிக்கும். அதன்பிறகு கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் ‛அயன்டோமில்' இருக்கும் இஸ்ரேலின் ஏவுகணைகள் எதிரி நாட்டு ஏவுகணைகள் வரும் திசையை நோக்கி ஏவப்பட்டு அதனை அழிக்கும்.
தற்போது இஸ்ரேலில் மொத்தம் 10 ‛அயன்டோம்'கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ‛அயன்டோம்'களும் பொதுமக்கள் வசிக்கும் 60 சதுர மைல் தூரத்துக்குள் வரும் ஏவுகணைகளை அழிக்கும். இந்த ‛அயன்டோம்' என்பது எதிரி நாடுகளிடம் இருந்து வரும் அனைத்து ஏவுகணையும் அழிப்பது இல்லை. பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி வரும் ஏவுகணைகளை மட்டுமே அழிக்கும். மற்றபடி கடல் மற்றும் பொதுமக்கள் இல்லாத இடங்களை நோக்கி வரும் ஏவுகணைகளால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் அதனை அப்படியே விட்டு விடும்.

ஏனென்றால் அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டத்துக்கு அதிக நிதி செலவாகும். ஒரு ஏவுகணையை இடைமறித்து சுட்டு வீழ்த்துவதற்கும், இடைமறிப்புக்கும் அதிக செலவாகும். அதாவது 40 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல் ரூ.50 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை செலவாகும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் கடந்த 10 ஆண்டு நிலவரப்படி ஏவுகணை தாக்குதல்களை இடைமறிப்பதில் இந்த அயர்ன் டோம் ஏர் டிபென்ஸ் சிஸ்டத்தின் சக்சஸ் ரேட் என்பது அதிகமாக இருக்கிறது. இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் பென்டகன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளன. இதனால் இஸ்ரேல் ‛அயன்டோம்' அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2020ல் அமெரிக்க இராணுவத்திற்கு இரண்டு அயர்ன் டோம் பேட்டரிகளை வழங்கப்பட்டது. ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்த சிஸ்டத்தை வழங்கும்படி உக்ரைனும் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் இந்த அமைப்பை உக்ரைனுக்கு வழங்கவில்லை. மேலும் இஸ்ரேல் இந்த ‛அயன்டோம்' அமைப்பை கண்டுபிடிக்க பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மற்றும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் தான் காரணம். பாலஸ்தீனம், லெபனானுடன் இஸ்ரேல் எல்லையை பகிர்ந்து வருகிறது. இரு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே மோதல் போக்கு என்பது இருந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு ஹிஸ்புல்லாவுக்கு எதிரான மோதலின்போது இஸ்ரேல் நாட்டின் நகரங்கள் மீது லெபனான் நாட்டில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 2007ல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கைப்பற்றிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இப்படி இருநாடுகளின் ஏவுகணை தாக்குதலை சமாளிக்க தான் இஸ்ரேல் ‛அயன்டோம்' அமைப்பை கண்டுபிடித்தது. ‛அயர்ன் டோம் ஏர் டிபென்ஸ் சிஸ்டம்' என்பது இஸ்ரேலில் இயங்கி வரும் ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்ஸ் மூலம் அமெரிக்க உதவியுடன் உருவாக்கப்பட்டது.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ‛அயன்டோம்' பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ‛அயன்டோம்' அமைப்பை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி செல்ல முடியும். இதனால் எதிரிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தும் இடத்தில் ஒவ்வொரு முறையும் ‛அயன்டோம்' அமைப்பை இஸ்ரேல் செயல்படுத்தி வெற்றி கண்டு வருகிறது.
இஸ்ரேலுக்கு ‛அயன்டோம்' இப்படியான பாதுகாப்பை வழங்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம்தேதி இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு காரணமாமே காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் தான் காரணம். அன்றயை தினம் அரை மணிநேரத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவினர். இதனை ‛அயன்டோம்' தான் இடைமறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications