"5 ஐஸ் அமைப்பு.." கனடாவுக்கு போன உளவு தகவல் என்ன.. வாய் திறக்க மறுக்கும் நாடுகள்.. பின்னணி என்ன
ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ கூறியது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுதான் இப்போது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் ட்ரூடோ பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார். இருப்பினும், இந்தியா அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கிடையே இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உளவுத் தகவல்: அதாவது கனடாவுக்கு சில வாரங்களுக்கு முன்பே இது குறித்த தகவல் தெரியுமாம். இருப்பினும், ஏதோ சில காரணங்களுக்கு அப்போது இதைப் பொதுவெளியில் கூறவில்லை. ஜி20 மாநாட்டில் கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் அதிகாரிகளுக்கு சூட் ரூம்களையே இந்தியா புக் செய்திருந்தது. இருப்பினும், அதில் தங்க மறுத்த கனடா அதிகாரிகள் நார்மல் ரூம்களிலேயே தங்கினர். மேலும், அதற்கும் கூட கட்டணங்களைச் செலுத்தத் தயார் என அவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே கனடா எப்படி இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது 5 ஐஎஸ் உளவு அமைப்பிடம் இருந்து கனடா உளவுத் தகவல்களைப் பெற்றது உண்மை தான் என்று கனடாவுக்கான அமெரிக்காவின் உயர்மட்ட தூதரக அதிகாரி டேவிட் கோஹன் தெரிவித்துள்ளார்.. 'ஃபைவ் ஐஸ்' நெட்வொர்க் என்பது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவு கூட்டமைப்பாகும். உளவுத் தகவல்களை இந்த நாடுகள் தங்களுக்குப் பகிர்ந்து கொள்ளும்.
வாய் திறக்க மறுப்பு: இது தொடர்பாக டேவிட் கோஹன் மேலும் கூறுகையில், "ஃபைவ் ஐஸ் அமைப்பிடம் இருந்து கனடாவுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்து உண்மைதான். அதன் பிறகே கனடா பிரதமர் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்" என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் என்ன மாதிரியான உளவுத் தகவல்கள் என்பது குறித்த தகவல்களை அவர் பகிர மறுத்துவிட்டார். உளவாளியிடம் இருந்து கிடைத்த தகவலா அல்லது போன் ஒட்டுக்கேட்பு மூலம் கிடைத்த தகவலா என்பதை அவர் பகிர மறுத்துவிட்டார்.
ஃபைவ் ஐஸ் கூட்டமைப்பிடம் இருந்து கனடா உளவுத் தகவல்களைப் பெற்றதாகக் கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. இருப்பினும், அதை யாரும் உறுதி செய்யவில்லை. இந்த சூழலில் அமெரிக்கத் தூதர் ஒருவரே இதை உறுதி செய்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அந்த கூட்டமைப்பில் இருக்கும் எந்த நாடு இந்த உளவுத் தகவலைப் பகிர்ந்தது என்பதையும் அவர் கூற மறுத்துவிட்டார்.
அமெரிக்கா நிலைப்பாடு என்ன: இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் 5 ஐஸ் அமைப்பின் நாடுகளைக் கனடா கேட்டுக் கொண்டதாகவும் இருப்பினும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதையும் கோஹன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், இது குறித்து அமெரிக்கா கனடா இடையே தீவிர ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications