முகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி
Recommended Video
ஜெனீவா: சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலனை கண்டுபிடிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து உடனடியாக விளக்க அறிக்கை அளிக்குமாறு பாஜக அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15 ம் தேதி சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவரை அதன் பின்னர் காணவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறையினரை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்தக் காணொளியில் இருக்கும் நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது அதில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி உட்பட 13 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ காவல் துறையினர் சிலர் மீது வழக்குப் பதிவும் செய்திருக்கிறது. இந்தச் சூழலில் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டை ஒட்டி கலவரச் சூழல் உண்டாக்கப்பட்டதில் காவல் துறையினருக்கு இருக்கும் பங்கு, அது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை முகிலன் சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு மதுரைக்கு செல்ல எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் மாயமானார். இதையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர். இந்தப் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆகியோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதன் பின்னர் முகிலன் எங்கே என்ற கேள்வி சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆனது. முகிலன் குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கும் முதல்வர் பழனிசாமி, “அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் “தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டக் கூடாது” என்றும் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலை ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்படாமல் இருந்தால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் ஐ நா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications