இன்று இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றி பெறப்போவது யார்? டாப் ‛5’ வேட்பாளர்கள் இவர்கள் தான்?
கொழும்பு: இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் ‛டாப்' 5 வேட்பாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல இலங்கை மீண்டு வரும் நிலையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 13,134 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று தேர்தல் முடிவடைந்த பிறகு ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கப்படும். தேர்தல் முடிவுகள் நாளைக்குள் வெளியாகி விடும்.
இதனால் இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது நாளை தெரிந்துவிடும். இந்த தேர்தலில் மொத்தம் 38 பேர் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். இதில் ‛டாப்' 5 வேட்பாளர்களின் விபரம் வருமாறு:
ரணில் விக்கிரமசிங்கே: ரணில் விக்கிரமசிங்கே தற்போது இலங்கையின் அதிபராக இருக்கிறார். இவருக்கு 75 ஆகிறது. தற்போது அடிப்படையில் வழக்கறிஞரான இவர் 6 முறை இலங்கை பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். யுஎன்பி எனும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் ரணில் விக்கிரமசிங்கே.
2022ம் ஆண்டில் அவர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தனக்கு கைக்கொடுக்கும் என்று அவர் நம்பி உள்ளார். இவர் எஸ்எல்பிபி எனும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை பெற தவறிவிட்டார். இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சஜித் பிரமதேசா: சஜித் பிரமதேசா தற்போது இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரமதேசாவின் மகன் ஆவார். இவருக்கு 57 வயது ஆகிறது. இவரது கட்சியின் பெயர் எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய. இந்த கட்சி என்பது யுஎன்பி கட்சியில் இருந்து பிரிந்து வந்ததாகும். இடதுசாரி வேட்பாளராக அறியப்படும் இவர் வரிச்சலுகைகளை மாற்றும் வாக்குறுதிகளை அளித்துள்ளார். இது அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
அனுரகுமார திஸாநாயக்கா: அனுரகுமார திசாநாயக்காவுக்கு 55 வயது ஆகிறது. இவர் என்பிபி எனும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் ஆதரவு கட்சியாக இருக்கும் பிஎல்ஃஎப் எனும் மக்கள் விடுதலை முன்னணி இடம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் அனுரகுமார திஸா நாயக்காவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டது. இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளதாக சில கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
நாமல் ராஜபக்சே: முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் தான் நாமகல் ராஜபக்சே ஆவார். இவருக்கு 38 வயது தான் ஆகிறது. இவரது கட்சியின் பெயர் எஸ்எல்பிபி எனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவாகும். இலங்கை அரசியலை எடுத்து கொண்டால் ராஜபக்சே குடும்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருப்பினும் கடந்த 2022ல் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியையும், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தனர். கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தான் நாமல் ராஜபக்சே தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
நுவான் போபகே: நுவான் போபகே பிஎஸ்ஏ எனும் போபகே மக்கள் போராட்ட கூட்டணி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். கடந்த 2022ல் இலங்கையில் போராட்டம் வெடித்த பிறகு கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் ஆட்சியை நீக்க அவர் முக்கிய பங்காற்றினார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளில் உறுதியாக உள்ளார்.
இவர்கள் 5 பேர் முக்கிய வேட்பாளர்களாக இருந்தாலும் கூட தேர்தலில் போட்டி என்பது தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதேசா, அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் இடையே தான் உள்ளது. மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவுக்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications