கத்தாரில் குண்டுபோட்ட இஸ்ரேல்.. டார்க்கெட் இவர் தான்.. யார் இந்த கலில் அல் ஹயா ? பரபரப்பு தகவல்
தோஹா: இஸ்ரேல் இன்று திடீரென்று கத்தார் தலைநகர் தோஹா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் குறிவைத்த கலில் அல் ஹயா யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் இந்த போரை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது. இந்த போர் நிறுத்தம் தொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தனது விமானப்படை விமானங்கள் மூலமாக கத்தார் தலைநகர் தோஹாவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தோஹாவில் இஸ்ரேல் யாரை குறிவைத்தது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா (Khalil Al-Hayya) தான். இவர் ஹமாசின் சீனியர் அதிகாரியாக உள்ளார். இவர் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
இப்போது தோஹோவில் இருந்து செயல்பட்டு வருகிறார். தற்போது இவருக்கு ஹமாஸ் அமைப்பில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அவர் வருங்காலத்தில் ஹமாசின் அடுத்த தலைவராக உயரலாம் என கூறப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக செயல்பட்ட இஸ்மாயில் ஹனியே மற்றும் யாக்யா சின்வார் ஆகியோரை கடந்த ஆண்டு இஸ்ரேல் படை தீர்த்து கட்டியது. அந்த வரிசையில் கலில் அல் ஹயாவை போட்டுத்தள்ள இஸ்ரேல் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கலில் அல் ஹயா இந்த தாக்குதலில் தப்பித்துள்ளார்.
இவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர். அதில் 6 பேர் இறந்துள்ளனர். அதன்படி கலில் அல் ஹயாவின் மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் உறுப்பினரான சுகைல் அல் ஹிந்தி உறுதி செய்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்கா முன்வைத்த பரிந்துரைகள் பற்றி ஆலோசித்து வந்தபோது இஸ்ரேல் தாக்குதலில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தான் இந்த தாக்குதலுக்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் கோழைத்தனமானது. சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறையை மீறும் வகையில் இந்த தாக்குதல் உள்ளது என கத்தார் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications