ஈரான் அதிபர் ஹெலிகாப்டரில் அப்படி எங்கே சென்றார்? நாட்டு எல்லையில் இருந்தது என்ன? ஷாக் தகவல்
டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி எங்கே சென்றார்.. எப்படி இந்த விபத்தில் சிக்கினார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

என்ன நடந்தது?: ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே செல்லும் போது விபத்து ஏற்பட்டு உள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அல்லது அவசரமாக தரையிறங்கியது ன்று அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், உள்துறை மந்திரி அஹ்மத் வஹிடி, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார். ஆனால் இப்போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அவசரமாக லேண்டிங் செய்யும் போது தவறுதலாக லேண்ட் செய்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிக்கல்: ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலை, காடுகள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் கடும் மூடுபனி கொண்ட இடம் ஆகும். இந்த மோசமான வானிலை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததால் முழுமையான மீட்பு பணிகளை மேற்கொள்ள 12 மணி நேரம் ஆனது.
ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் பலியாகிவிட்டனர்.
ஏன் சென்றார்?: அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்ட ஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார்.
அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் அந்நாட்டின் மிக உயரிய அரசியல் தலைவர்கள் ஆவர்.
இவ்வளவு மோசமான வானிலையில் ஹெலிகாப்டரை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் இவர்; கடந்த 1960 டிசம்பர் 14ஆம் தேதி அங்குள்ள மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த இப்ராஹிம் ரைசி. பள்ளிப் படிப்பை முடித்த இவர், தொடர்ந்து சட்டப் படிப்பை முடித்தார். ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராக ரைசி வலம் வந்தார். தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2019இல் ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. கடந்த சில வாரங்களாக ஈரான் - இஸ்ரேல் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிலும் இஸ்ரேல் மீது ஈரான் பல சர்ப்ரைஸ் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் நடந்து உள்ளது.












Click it and Unblock the Notifications