"மெகா ஸ்கெட்ச்.." காசா மருத்துவமனைகளை குறிவைக்கும் இஸ்ரேல்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் பின்னணி
டெல் அவிவ்: காசாவில் உள்ள மருத்துவமனைகளைக் குறித்து வைத்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை தொடர்ந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்திய நிலையில், அதன் பிறகு இஸ்ரேலும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.

முதலில் காசா மீது ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திய நிலையில், மெல்லப் படையெடுப்பையும் ஆரம்பித்தது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்ரேல் காசா தாக்குதல்: இதற்கிடையே காசாவில் உள்ள பல மருத்துவமனைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வடக்கு காசாவில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு அருகே குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.. கடந்த வெள்ளிக்கிழமை இந்த மூன்று மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல மற்றொரு மருத்துவமனையைச் சுற்றிலும் தரைவழி தாக்குதல் நடந்து வருவதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த அக். 7ஆம் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் காசாவில் உள்ள முக்கிய இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், இப்போது காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
காசா மருத்துவமனைகள்: மருத்துவமனை அருகே நடந்த குண்டுவெடிப்பில் மருத்துவமனையின் சில பகுதிகள் சேதமடைந்ததாக இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். அங்குள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையை இஸ்ரேல் பீரங்கிகள் சூழ்ந்த நிலையில், குண்டு வெடிப்பு மருத்துவமனை அருகிலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனைதான் இஸ்ரேலின் முதன்மை இலக்காக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், திடீரென காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த என்ன காரணம் என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஏனென்றால் பொதுவாகப் போர் சமயங்களில் மக்கள் இருக்கும் பொது இடங்கள், அதிலும் குறிப்பாக மருத்துவமனைகள், பள்ளிகள் மீது தாக்குதல்களை நடத்தவே மாட்டார்கள்.
என்ன காரணம்: போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக இப்படி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். அப்படியிருக்கும் போது மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அல் ஷிஃபா மருத்துவமனை கீழ் தான் ஹமாஸின் முக்கிய சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
அங்கே ஹமாஸின் கட்டளை மையம் இருக்கிறது. அதைக் கைப்பற்றவே அல் ஷிஃபா மருத்துவமனை மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த மோதலில் இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் நிற்கிறோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் வசம் உள்ள பிணையக் கைதிகள் விடுவிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா: இதற்கிடையே பிரதமர் மோடி மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் இடையே தொலைப்பேசி உரையாடலும் நடைபெற்றது. அதில் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரால் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications