வெளிவந்தது உண்மை.. வங்கதேசம் கலவரம் பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ! ஆதாரமும் இருக்கு! ஹசீனா மகன் பகீர்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா நாட்டை விட்டே வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் சில பகிர் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக அவர் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பலரும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். இப்போது அவர் டெல்லி அருகே பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் விரைவில் வெளிநாட்டில் புகலிடம் கோர உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹசீனாவின் மகன் : இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் சில பகீர் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது இப்போது வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மைக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் நிலவும் குழப்பத்திற்கு வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாக, குறிப்பாகப் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிற்கு இதில் தொடர்பு இருப்பதாக சஜீப் வசேத் ஜாய் பரபர குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார்..
துப்பாக்கிகள்: கலவரக்காரர்கள் போலீசாரை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறிய சஜீப் வசேத், துப்பாக்கிகளைப் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுச் சக்திகளால் மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வங்கதேசத்தில் ஜனநாயகம் திரும்பியவுடன் ஷேக் ஹசீனா மீண்டும் நிச்சயம் வங்கதேசத்திற்குத் திரும்புவார் என்றும் ஜாய் ஷேக் ஹசீனா கூறினார்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவது உறுதி என்றாலும் அங்குச் சென்ற பிறகு மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஜாய் ஷேக் கூறினார். மேலும், ஹசீனாவின் குடும்பத்தினர் எப்போதும் நாட்டு மக்களையும் அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
சும்மா விட மாட்டோம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆம் சில நாட்களுக்கு முன்பு நான் தான் ஹசீனா மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்ப மாட்டார் எனச் சொல்லியிருந்தேன். ஆனால், கடந்த 2 நாட்களில் அங்கு பல விஷயங்கள் மாறிவிட்டன. நாடு முழுவதும் தாக்குதல்கள் அதிகரித்தன. இப்போது எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் அதைச் செய்யப் போகிறோம்.. இந்த வன்முறைக்குக் காரணமானவர்களை நாங்கள் சும்மா விடப் போவதில்லை.
அவாமி லீக் தான் வங்கதேசத்தில் இருக்கும் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்சி. எங்களால் மக்களை விட்டு விலகிச் செல்ல முடியாது. ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டவுடன் அவர் நிச்சயமாக வங்கதேசத்திற்குத் திரும்புவார்" என்று கூறினார்.
மோடிக்கு நன்றி: மேலும், தனது தாயைப் பாதுகாத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ஜாய் ஷேக், வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அவாமி லீக் காலத்தில் வங்கதேசம் எப்போதும் இந்தியாவுடன் நல்லுறவையே வைத்து இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அழுத்தத்தை உருவாக்கி வங்கதேசத்தில் உள்ள அவாமி லீக் தலைவர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.. மேலும், வங்கதேசத்தில் இப்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இரண்டாவது ஆப்கானிஸ்தானாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications