பிரசவத்துக்கு வந்தாலும் கடமையே கண்ணாயிரம்... செமஸ்டர் தேர்வு எழுதிய கர்ப்பிணி
பிரசவத்துக்கு வந்தாலும் அமெரிக்காவைச் சேர்ந்த நஸியா தாமஸ் செமஸ்டர் இறுதி தேர்வு எழுதும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
வாஷிங்டன்: பிரசவத்துக்கு வந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு தேர்வு எழுதும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
பிரசவம் என்பது பெண்ணுக்கு மறுபிறவி என்பதால் அன்றைய தினம் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி காத்திருப்பர். வலி, வேதனை இருக்கும் போதிலும் என்ன குழந்தையாக இருக்கும், எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இருப்பர்.
10 மாதங்களாக பிரசவத்துக்காக மனதையும் உடலையும் பெண்கள் தயார் நிலையில் வைத்திருப்பர்.
பெண் கல்வி
அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் நஸியா தாமஸ். இவர் கர்ப்பம் அடைந்த நிலையில் கல்லூரிக்கு சென்றுவந்துள்ளார்.
மருத்துவமனையில்...
இந்த நிலையில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அவர் கடந்த 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவரது பிரசவ தேதியும் செமஸ்டர் இறுதி தேர்வும் ஒன்றாக வந்தன.
உளவியல் தேர்வு
இதையடுத்து தேர்வை எழுதாமல் விட்டால் உழைப்பு வீணாகிவிடும் என்ற காரணத்தால் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தேர்வு எழுதினார். அதுவும் உளவியல் பாடப்பிரிவை தமது லேப்டாப் மூலம் எழுதினார்.
வைரலாகும் புகைப்படம்
தேர்வு எழுதியவுடன் பிரசவத்துக்கு தயாரான நஸியாவுக்கு 12-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் தேர்வு எழுதுவதை அவரது தாய் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த படத்துக்கு லட்சக்கணக்கானோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்.