கைஸ், எல்லோரும் படுத்து இழுத்து மூச்சுவிடுங்க: ஈபிள் கோபுரத்தில் நடந்த யோகா நிகழ்ச்சி
பாரீஸ்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரம், பாட்டாக்ஸ்-மூஷ் படகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடந்துள்ளது.
சர்வதேச யோகா தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸ்
சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் நாட்டின் 20 நகர்களில் 28 யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியது.

கலாச்சார மையம்
பிரான்ஸ் நாட்டின் முக்கிய கலாச்சார மையங்களில் ஒன்றான கிராண்ட் ஹால் டி லா வில்லெட்டில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

தூதர் மோகன் குமார்
கிராண்ட் ஹால் டி லா வில்லெட்டில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரான்ஸுக்கான இந்திய தூதர் மோகன் குமார் கலந்து கொண்டார். இந்திய கிளாச்சிகல் இசை நிகழ்ச்சியுடன் துவங்கி யோகா, தியானம் உள்ளிட்டவை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்கப்பட்டது.

ஈபிள் கோபுரம்
பாரீஸ் நகரில் பாட்டாக்ஸ்-மூஷ் படகில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த படகு பாரீஸில் உள்ள அனைத்து பாலங்கள் வழியாகவும் சென்றது. மேலும் ஈபிள் கோபுரத்தின் கீழும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications