“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ்
தெஹ்ரான்: நேற்று தங்கள் நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியிருந்தது. விமானத்தை ஓட்டி வந்த விமானியை காணவில்லை என்று அவரது தாய் கூறியிருந்த நிலையில், "உங்கள் மகன் டிரம்ப் உடன் இருப்பதை விட, எங்களுடன் இருப்பது அவருக்கு பாதுகாப்பானது" என்று ஈரான் விமானியின் தாய்க்கு மெசேஜ் கொடுத்திருக்கிறது.
நேற்று அமெரிக்காவின் இரண்டு விமானங்களை ஈரான் வீழத்தியிருந்தது. அதில் ஒரு விமானம் முற்றிலும் சேதமடைந்திருப்பதால், விமானி உயிருடன் தப்பித்திருக்க வாய்ப்பு இல்லை. மற்றொரு விமானத்தில் 2 விமானிகளும் தப்பியிருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருவரை மட்டுமே அமெரிக்கா காப்பாற்றியிருக்கிறது. மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விமானியின் தாயார் ஒருவர், தனது மகனை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை என்றும், அவரது கதி என்னவென்று தெரியாமல் தவிப்பதாகவும் x தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கையில், இதற்கு ஈரான் பதிலளித்திருக்கிறது.
"உங்கள் மகன் டொனால்ட் டிரம்ப் கையில் இருப்பதை விட, ஈரான் வசம் கைதிகளாக இருப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பு. அமெரிக்க மீட்புக் குழுவினரிடம் சிக்காமல், அவர்கள் ஈரானிடம் பிடிபட வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். கைதிகளை கண்ணியத்துடன் நடத்த எங்களுக்குத் தெரியும்" என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரகம் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
அதேபோல, "மனிதநேய சட்டங்கள் எழுதப்படுவதற்கு முன்பே கைதிகளின் உரிமைகளை வரையறுத்த நாகரிகம் எங்களுடையது. அமெரிக்காவைப் போல நாங்கள் கற்காலத்தில் வாழவில்லை" என்று தென்னாப்பிரிக்காவுக்கான ஈரான் தூதரகம் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
ஈரான் போர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை போரில் மொத்தம் 1900க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதில், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 13 பேர். இஸ்ரேலை சேர்ந்தவர்கள் 19 பேர். மீதமுள்ளவர்கள் அனைவரும் ஈரானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications