TTF ஸ்டிக்கருடன் வழிப்பறி, கொள்ளை.. "வாத்தி ரெய்டு" விட்ட போலீஸ்.. சிக்கிய இளைஞருக்கு மாவு கட்டு
காஞ்சிபுரம்: டிடிஎஃப் ஸ்டிக்கருடன் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான இளைஞர் வழுக்கி விழுந்ததில் இந்த இளைஞரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குள்ளப்பன் நகர் பகுதியில் விமல் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை இவரது கடைக்கு இளைஞர்கள் மூவர் வந்திருக்கின்றனர்.
என்ன பொருள் வேண்டும் என்று கேட்டதற்கு கடைக்குள் நுழைந்த இந்த மூவரும் பட்டா கத்தியை காட்டி கடையிலிருந்து பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் கடைக்காரர் விமல் பணத்தை கொடுக்க ஒப்புக்கொள்ளவில்லை.
கொள்ளை
எனவே இவர்கள் கத்தியை கொண்டு லைட்டாக தாக்கியுள்ளனர். உடனே விமல் வேறு வழியின்றி பணத்தை கொடுத்திருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்டதுடன் இல்லாமல் விமலின் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையில் விமல் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தினேஷ் எனும் இளைஞரை கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "காஞ்சிபுரம் மாவட்டத்தில் படாளம் தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவீதி, டோல்கேட், தேனாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பட்டா கத்தி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. இதுவரை 7 பெட்டிக்கடைக்காரர்கள் புகார் அளித்துள்ளனர்.
தாக்குதல்
இவர்கள் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கடைகளை பார்த்து நோட்டம் விடுவார்கள். பின்னர் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடிப்பார்கள். கடைக்காரர்கள் பணத்தை கொடுக்கவில்லையெனில் அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு அவர்களுடைய செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து பறந்து விடுவார்கள். இதனால் கடைக்காரர்கள் ரூ.2,000-3,000 வரை இழந்திருக்கிறார்கள். சில கடைக்காரர்கள் பட்டா கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த கும்பல் குள்ளப்பன் நகரிலும் கைவரிசையை காட்டியுள்ளது.
கைது
எனவே புகாரையடுத்து நாங்கள் முதலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம் அதில், கருப்பு கலர் பல்சர் பைக்கில் வந்தவர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. எனவே அவர்களை பிடிக்க தீவிர வாகன சோதனையை மேற்கொண்டோம். இந்நிலையில் நேற்றிரவு பைக்கில் இளைஞர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை பிடித்து விசாரிக்கையில் அவரது பெயர் தினேஷ் என்பது தெரிய வந்தது. மற்ற விவரங்களை விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். எனவே அவரை கைது செய்து விசாரணை செய்தோம். விசாரணையில் தான்தான் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
கஞ்சா&TTF
அதேபோல பட்டா கத்தியில் பலரை தாக்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பெட்டிக்கடை வைத்திருப்பவர்களை தவிர்த்து தனியாக செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்களையும் இவர் மிரட்டி பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவருடன் கொள்ளை, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்கில் டிடிஎஃப் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்கள் அனைவரும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது வழுக்கி கீழே விழுந்ததில் இளைஞர் தினேஷின் கையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது" என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.