பாஜகவில் மாவட்ட அளவில் பொறுப்பு வழங்கப்பட்ட.. முன்னாள் ரவுடி படப்பை குணா கைது
சென்னை: படப்பை குணாவை சுங்குவார்சத்திரம் அருகே மதுரைமங்கலத்தில் தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்துள்ள மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என். குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது.

குறிப்பாக 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கிறது. படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் படப்பை குணாவும் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பும் வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார். படப்பை குணாவுக்கு பாஜகவில் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த போது பிரபல முன்னாள் ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. படப்பை குணாவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications