துடித்துக் கொண்டிருக்கிறது பாஜக.. மோடியின் செயல் திட்டம் இதுதான்.. திருமாவளவன் பொளேர்
காஞ்சிபுரம்: புதுச்சேரியில் அநாகரீகமான அரசியல் சித்து விளையாட்டில் பாரதிய ஜனதா கட்சி இறங்கி இருக்கிறது என்றும் அதனை அனைத்து ஜனநாயக கட்சியினரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் காலனியில் அரசு பள்ளி கட்டுமான பணியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும், கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை அ.செல்வராசு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன உரை ஆற்றினார்.
துடிக்கிறது பாஜக
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி மிக மோசமான அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது. கர்நாடகாவில் மத்தியபிரதேசத்தில் செய்ததைப் போல தமிழகத்திலும் அநாகரீக அரசியலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கீழ்தரமான அரசியல்
அதற்கு ஒரு முன்னோட்டமாக தான், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் எல்லாம் வளைத்துப் போட்டு விலைக்கு வாங்கும் நிலைக்கு இறங்கி இருக்கிறார்கள் இது மிக கீழ்தரமான அரசியல். இந்த போக்கை விடுதலைச் சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழிசை
கிரண்பேடி அவர்களை மாற்றியதற்கு என்ன காரணம் என்று தெரியாது. தமிழிசை அவர்களை அங்கே நியமித்து இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியாது. ஆனால் அங்கே அரசியல் சித்து விளையாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டிருக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்குண்டான செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து தரப்பு ஜனநாயக கட்சிகளையும் வன்மையாக கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அண்ணா பல்கலைக்கழகம்
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என இருட்டடிப்புச் செய்யப்படுகிற முயற்சியில் ஈடுபட்டார்கள். 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாது 49.5 விழுக்காட்டை தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மத்திய அரசு தரப்பில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதாக தெரிகிறது மோடி அரசின் சமூக நீதிக்கு எதிரான அரசு ஓபிசி மக்களுக்கும் எதிரான அரசு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் இப்போது உயர்நீதிமன்றம் அந்த நிலைக்கு எதிராக 69 விழுக்காட்டை பின்பற்றச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளது" என செய்தியாளர்களிடம் திருமாவளவன் தெரிவித்தார்.