பாஜக டார்கெட் காஞ்சிபுரம்.. அண்ணா பூமியை ஆன்மீக பூமியாக்க அதிரடி ப்ளான்.. பெரும் தலை களமிறங்குகிறது?
லோக்சபா தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியை டார்கெட் செய்து களமிறங்க காத்திருக்கிறதாம் பாஜக.
காஞ்சிபுரம்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக மேலிடம் குறிவைக்கும் தமிழ்நாட்டு தொகுதிகளில் காஞ்சிபுரம் மிக முக்கியமானதாக இருக்கக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். காஞ்சிபுரம் தொகுதியில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிக முக்கியமான தலைவர் ஒருவரை பாஜக போட்டியிட வைத்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றன அக்கட்சி தகவல்கள்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்று மத்தியில் 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜக படுதீவிரமாக உள்ளது. பாஜகவால் அதிகம் ஸ்கோர் செய்ய முடியாத தென்னிந்திய மாநிலங்களில் இம்முறை அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு இருக்கும் என சில தொகுதிகளை நம்புகிறது. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தீருச்சி, நெல்லை ஆகியவை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போட்டு இப்போதே தேர்தல் பணிகளை பல்வேறு வகைகளில் தமிழ்நாடு பாஜக மேற்கொண்டு வருகிறது.

ஆனால் டெல்லி மேலிடமோ தமிழ்நாட்டில் பெறப் போகும் வெற்றி, ஒட்டுமொத்த திராவிட கட்சிகள், அவர்களது வாக்கு வங்கியில் மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாக இருக்கிறதாம். ஒரு தொகுதியில் ஜெயித்தாலும் ஒரு உலுக்கு உலுக்கி எடுக்க வேண்டும் என்பதுதான் டெல்லி பாஜகவின் ப்ளானாக சொல்லப்படுகிறது. இதற்காக டெல்லி பாஜக மேலிடம் குறிவைத்திருப்பதுதான் காஞ்சிபுரம் தொகுதி என்கின்றனர்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அப்படி ஏதேனும் பாஜக செய்து கொண்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்ய அத்தொகுதியின் சீனியர் பத்திரிகையாளர்களிடம் நாம் பேசினோம். அவர்கள் அடுக்கடுக்காக வைக்கும் தகவல்கள் மலைப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றன. பிரதமர் மோடி, புண்ணிய தலமான ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் என ஒருதகவல் பரப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைமை கூட இதனை வதந்தி என நிராகரித்துவிட்டது. ஆனால் காஞ்சிபுரம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திரைமறைவு நடவடிக்கைகள் யாருக்காக இப்படி பாஜக தலைமை மெனக்கெடுகிறது என்கிற இயல்பான கேள்வியை எழுப்புகிறதாம்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியானது இப்போது தனித் தொகுதியாக உள்ளது. இதனை உடனே பொதுத்தொகுதியாக மாற்றிவிட முடியாது. அனைத்து தொகுதிகள் மறுசீரமைப்பின் போதுதான் பொதுத் தொகுதியாகவும் மாற்ற முடியும். ஆகையால் பொதுத் தொகுதியாக மாற்றுவதற்கான சட்ட வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து பாஜக தரப்பு ஆராய்ந்து கொண்டிருக்கிறதாம். அதேநேரத்தில் காஞ்சிபுரம் தொகுதியை முழுமையான ஒரு ஆன்மையாக பூமியாக உருமாற்றுவதற்கான அத்தனை திட்டங்களையும் செயல்படுத்த முதலில் பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறதாம் டெல்லி பாஜக மேலிடம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பரந்தூரில் விமான நிலையம் அமைந்தே தீரும்; நில விவகாரத்தை மாநில அரசுதான் தீர்க்க வேண்டும் என்றார். அந்த அளவுக்கு பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வருவதில் பாஜக தீவிரமாக இருக்க காரணமே காஞ்சிபுரம்தானாம்.

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பிறந்த பூமி. அதாவது திராவிடர் பேரியக்கத்தின் தலைமகன் அண்ணாவின் பூமி. அன்று அண்ணாவையே தோற்கடித்த மண் என்றாலும் அப்போதைய அரசியல் களம் வேறு. இப்போது அண்ணாவின் மண்ணில் ஆன்மீக கட்சியான, இந்துத்துவா கட்சியான பாஜக வெல்வது என்பது திராவிடர் இயக்கம், திராவிட மாடல் அத்தனைக்குமான உளவியல் பேரிடியாக இருக்கும் என்பதுதான் பாஜகவின் ஸ்கெட்ச். இதற்காகவே இப்போது பாஜக மற்றும் ஆதரவு கூட்டம் படுபிஸியாக காஞ்சிபுரத்தை மையமாக வைத்து பம்பரமாக சுழன்று வருகின்றனவாம். காஞ்சிபுரத்தில் களமிறக்கப்படப் போகும் அந்த பெருந்தலை யாராக இருக்கலாம்? பிரதமராக இருக்கலாமோ? யோகியாக இருக்கலாமா? அந்த ஆன்மீக சர்ச்சை சாமியாராக இருக்கலாமா? என்கிற விவாதங்கள் இப்போதே பட்டுசேலை பூமியில் படபடத்துக் கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications