"இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே".. கண்ணீர் விட்ட மணிகண்டன்
காஞ்சிபுரம் அருகே 50 புறாக்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
மதுராந்தகம்: "ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே" என்று மணிகண்டன் கண்ணீர் வடித்தது காண்போரை கலங்க செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு புறா என்றால் ரொம்ப பிடிக்கும்.
அதனால் தன்னுடைய வீட்டில் 200க்கும் மேற்பட்ட புறாக்களை ஆசையாக வளர்த்து வருகிறார். இந்த புறாக்களை யாருக்கும் இவர் விற்பது கிடையாது. இறைச்சிக்காக பயன்படுத்தி கொள்வதும் கிடையாது. தனிப்பட்ட ஆசையால் இந்த புறாக்களை வளர்த்து வருகிறார்.

அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென இவர் வீட்டின் மாடியில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன. இதை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார். ஆனால், புறாக்கள் வெளியில் ஏதாவது விஷம் கலந்த உணவை சாப்பிட்டிருக்கும், அதனால்தான் இறந்து போயிருக்கும் என்று நினைத்துவிட்டார். இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் விட்டுள்ளார்.

இரை
இந்நிலையில், இன்று காலை வீட்டில் அடைத்து வைத்திருந்த புறாக்களை வழக்கம்போல் கூண்டில் இருந்து திறந்துவிட்டார். திறந்து விட்ட புறாக்கள் வீட்டின் எதிரே சாலையில் இரை சாப்பிட்டு கொண்டிருந்தன. இதை மணிகண்டன் பார்த்து கொண்டே இருந்தார்.

பதறினார்
அப்போது, திடீரென 50 க்கும் மேற்பட்ட புறாக்கள் துடிதுடித்து ஒவ்வொன்றாக இறந்து விழுந்தன. கண்ணெதிரில் ஆசை ஆசையாக வளர்த்த புறாக்கள் துடிதுடித்து விழுவதை கண்ட மணிகண்டன் பதறி துடித்தார். இவரது வீடு ரோட்டோரம் இருப்பதால் நெல்லில் யாரோ விஷம் கலந்து தூவி சென்று உள்ளனர் என்றும், அதை தின்ற புறாக்கள் துடிதுடித்து இறந்து விட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.

விசாரணை
இதனால் மணிகண்டன் படாளம் போலீசிலும் புகார் அளித்துள்ளார். 50 புறாக்கள் இப்படி கொத்து கொத்தாக விழுந்து மடிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications