காஞ்சிபுரம் அருகே லாரி மீது ஆம்னி கார் மோதல்.. 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..அடுத்தடுத்து சோகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்னாமலை மாவட்டம் செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரத்னா மற்றும் அவரது குழந்தைகள் ராஜலட்சுமி, ஜெயகிருஷ்டி மற்றும் 2 மாத கைக்குழந்தை ஆகிய 4 பேரும் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் இருந்துள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக ராமஜெயம் தனது சித்தப்பா மகன் ராஜேசுடன் ஆம்னி காரில் சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னைக்கு வந்து தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் சென்ற ஆம்னி வேன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிந்தது. அப்போது சித்தேரி மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த கோர விபத்தில் ராமஜெயம் தவிர ஏனைய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ராமஜெயத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications