“தமிழ்நாடு நாள்”.. இன்று காஞ்சிபுரத்தில் தமிழக அரசு சார்பில் விழா.. அமைச்சர்கள் பங்கேற்பு!
காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி ஜூலை 18 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விழா நடைபெறுகிறது.
பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1967 ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இந்த நாள் தமிழக அரசு சார்பில் "தமிழ்நாடு நாள்" என கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 'தமிழ்நாடு நாள் விழா' ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு நாள் விழா பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன் இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். அதேபோல், இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., தலைமையுரையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழா சிறப்புரையும் ஆற்ற உள்ளனர்.
இந்த விழாவில் ஆழி.செந்தில்நாதன் தலைமையில் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற உள்ளது. 'தமிழ்நாடு வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானாவும், 'சென்னை மாகாணமும் செயற்கரிய போராட்டங்களும்' என்ற தலைப்பில் சிவ.சதீஷ் மற்றும் 'சென்னை மீட்பும் வரலாறும்' என்ற தலைப்பில் அனுகிரகாவும் 'திராவிட இயக்கத் தலைவர்களும் நவீன தமிழ்நாடும்' என்ற தலைப்பில் சூர்யா கிருஷ்ணமூர்த்தியும், 'தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்ட வரலாறு' என்ற தலைப்பில் மா.மதன்குமார் ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சென்னை மாவட்டம் கோ.தீபஸ்ரீ என்ற மாணவிக்கு 50,000 ரூபாய் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், இரண்டாம் பரிசு பெற்ற திருவள்ளூர் மாவட்டம் ம.ஜெயஜனனி என்ற மாணவிக்கு 30,000 ரூபாய் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், மூன்றாம் பரிசு பெற்ற ஈரோடு மாவட்டம் மு.வீரமணிகண்டன் என்ற மாணவனுக்கு 20,000 ரூபாய் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவாரூர் மாவட்டம் ச.கௌ.பாவேஷ் பிரசன்னா என்ற மாணவனுக்கு 50,000 ரூபாய் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்டம் அ.அப்துல் ஹக்கீம் என்ற மாணவனுக்கு 30,000 ரூபாய் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், மூன்றாம் பரிசு பெற்ற சென்னை மாவட்டம் நா.ரிஸ்வானா பர்வின் என்ற மாணவிக்கு 20,000 ரூபாய் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி விழாப் பேருரையாற்ற உள்ளார்.
இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் திவ்வியப்பிரியா இளமது ஆகியோர் வாழ்த்துரையும், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் க.பவானி நன்றியுரையும் வழங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications