அத்திவரதர் குறித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் கருத்து தவறானது.. வரதராஜ பெருமாள் கோயில் பட்டர்
காஞ்சிபுரம்: அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமிகள் கூறியது தவறானது என வரதராஜ பெருமாள் கோயில் பட்டர் ஸ்ரீசா பேட்டி அளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ஜீயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது.
கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் வைத்திருந்தனர். தற்போது அது தேவையில்லை என்பதால் முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கோயிலிலேயே இருக்க வேண்டும் என அத்திவரதரே ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் கனவில் வந்து கூறியதாகவும் ஜீயர் தெரிவித்தார். அத்திவரதரை குளத்தில் மீண்டும் வைக்கக் கூடாது என்ற கருத்துக்கு காஞ்சிபுரம் வரதராஜ கோயில் பட்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு வரதராஜ கோயில் பட்டர் ஸ்ரீசா பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் நவீன காலம் என்பதால் சுவாமியை பொருள்காட்சியாக பார்க்க் கூடாது.
அவ்வாறு சுவாமியை பொருள்காட்சியாக ஆக்குவதற்கு ஜீயர்கள் ஆதரவளித்தால் இந்து மதத்திற்கே தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும் என ஸ்ரீசா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications