அத்திவரதர் தரிசனம்.. ரத்து செய்யப்பட்ட விஐபி, விவிஐபி தரிசனம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் 39 ஆவது நாளான இன்று அத்திவரதர் வைபவத்தில் விஐபி, விவிஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு நிலையில் தற்போது பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ளது வரதராஜ் பெருமாள் கோயில். இங்கு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுக்கப்படும் அத்திவரதர் பொதுமக்களுக்கு 48 நாட்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி சயன கோலத்தில் காட்சியளித்து வந்த வரதர், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். கடந்த 38 நாட்களாக 40 லட்சத்துக்கும் அதிகமானோர் வரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இந்த வைபவம் வரும் 17-ஆம் தேதி மதியம் 12 மணியுடன் முடிவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணிக்கு மூடப்படும். பின்னர் வரிசையில் இருக்கும் பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் வழங்கப்படும். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் 16, 17 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனத்தில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 39-ஆவது நாளான இன்று அத்திவரதரை காண்பதற்கான விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
காலை 5 மணி முதல் பொது தரிசனம், விஐபி, விவிஐபி தரிசனம் இன்னும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் கவலையுடன் காத்து கிடந்தனர். இந்த நிலையில் கூட்டம் நெரிசல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விஐபி, விவிஐபி தரிசனங்கள் மதியம் 2 மணிக்கு மீண்டும் தொடங்கவுள்ளது. பொது தரிசனமும் தாமதமாக தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications