புளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில்லறை வணிக கடைகளில் லாப நோக்குடன் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் ராகுல் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில்லறை வணிக கடைகளில் விற்பனை செய்யப்படும் பால், தோசைமாவு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடையில் வாங்கிய தரம் குறைந்த மற்றும் கெட்டுப்போன தோசை மாவை கடையில் கொண்டு திருப்பி கொடுக்கச் சென்றார்.

அப்போது கடைக்காரரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் லாபம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்து தரம் குறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இது போன்ற பொருட்களை வாங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் பயணத்தை தொடங்கி உள்ளார்.
நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்த அவர் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் லாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் வனிகர்களை பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும். தரம் குறைந்த மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியிருந்தார்.
தரம் குறைந்த பொருட்களை மாலையாக போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய ராகுல், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்படுதாக தெரிவித்தார் ராகுல்.
இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் சோதனை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications