பேரறிவாளனை கட்டியணைத்த முதல்வர்! இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு நல்லது இல்லை! பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!
கன்னியாகுமரி : பேரறிவாளன் விசயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு எடுத்துள்ளது ஆனால் தமிழக முதல்வர் அதற்காக அவரை கட்டி அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.
எங்களது இல்லத்திற்கு வந்த எங்களது பிள்ளை... பேரறிவாளன் குறித்து திமுக மூத்த தலைவர் 'சுப்பு' அக்கா!
பேரறிவாளன் விடுதலை
குறிப்பாக காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு தமிழகத்தில் அங்கம் வகிக்கும் திமுக இதனை வரவேற்றுள்ள நிலையில், ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தீவிர முயற்சி எடுத்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு. விடுதலையான நிலையில் தனது தாயா அற்புதம்மாளுடன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்
இந்நிலையில், பேரறிவாளனை கட்டி அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பின்னர் தமிழகத்தில் இடம் இல்லை என்று கூறினார்.
பணம் இல்லை
அதே போன்று தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு, தேர்தலில் ஜெயித்து ஓராண்டிற்கு பின் தற்போது தமிழகத்தில் பணம் இல்லை என்று தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கூறியுள்ளார். இது பழைய தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறது. இனி நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு, தானொரு அமைச்சர் என்பதே தனக்கு இப்போதுதான் நினைவுக்கு வருகின்றது என்று கூறுவார்.
தமிழகத்திற்கு நல்லதல்ல
பேரறிவாளன் விசயத்தில் நீதிமன்றம் விடுதலை முடிவு எடுத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் அதற்காக அவரை கட்டி அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல. இலங்கை தமிழர்களின் அழிவுக்கு திமுகவும் காங்கிரஸ் தான் காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்கும் அளவிற்கு நாட்டில் கருப்பு பணம் உள்ளது என கூறியவர் பிரதமர் மோடி.
மத ரீதியான பிரச்சனை
ஆனால் 15 லட்ச ரூபாய் கொடுப்பேன் என்று கூறியவர் ராகுல் காந்தி. எனவே அந்த பணத்தை காங்கிரஸ் கட்சி கொடுக்கட்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சரின் போலீஸ் தலையீடு காரணமாக, மீண்டும் இங்கு மத ரீதியான பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகிவிடக்கூடாது. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது" என பேசினார்.