முதலமைச்சர் விஜய்யின் கருப்பு கோட் பின்னால் இருக்கும் ‘ரகசியம்’.. விலை இவ்வளவாம்!
சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது முதல் சட்டமன்ற வருகையிலேயே அரசியல் வட்டாரங்களையும், சமூக வலைதளங்களையும் பரபரப்பாக்கியுள்ளார். காரணம் அவரது அரசியல் முடிவுகள் மட்டுமல்ல, அவர் தேர்வு செய்த உடை ஸ்டைலும் தான். அவர் முதலமைச்சர் ஆக பதவி ஏற்கும் போது மட்டுமல்லாமல் சட்டமன்ற கூட்டத்திற்கும் கோட் சூட்டுடன் கலந்து கொண்டு வருகிறார். இதன் பின்னணி பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது
முதலமைச்சர் விஜய் கோட்-சூட்
பொதுவாக தமிழ்நாடு அரசியல்வாதிகள் என்றால் வெள்ளை வேஷ்டி-சட்டை என்பது ஒரு பாரம்பரிய அடையாளமாக இருந்து வந்தது. ஆனால் அந்த நடைமுறையை முற்றிலும் மாற்றி, கருப்பு நிற கோட்-சூட் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல் முதலமைச்சராக விஜய் கவனம் ஈர்த்துள்ளார்.
இந்த புதிய தோற்றம் சிலரிடம் பாராட்டைப் பெற்றாலும், "பாரம்பரிய உடையை தவிர்க்க வேண்டுமா?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இருப்பினும், இளைஞர்கள் மத்தியில் விஜய்யின் இந்த ஸ்டைல் மிகப்பெரிய டிரெண்டாக மாறியுள்ளது.

பின்னணி தகவல்கள்
விஜய் அணிந்த இந்த கோட்-சூட் ஒரு சாதாரண ஆடை அல்ல. பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ஃபிர் அகமது இதை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உடை உருவாக்கப்பட்ட விதமும் சுவாரஸ்யமானது. பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யின் ஸ்டைலை அடிப்படையாகக் கொண்டு இந்த கோட்-சூட் டிசைன் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த உடையின் நிறமாக கருப்பை தேர்வு செய்தது விஜய் தானாம். "கருப்பு நிறம் என்பது அதிகாரம், ஆளுமை, தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது" என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிறத்தை அவர் தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், விஜய்யின் உடலமைப்புக்கு சரியாக பொருந்தும் வகையில் இந்த கோட்-சூட்டை தயாரிக்க ஆடை வடிவமைப்பாளர் இரண்டு நாட்கள் முழுவதும் வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கோட்-சூட் விலை என்ன?
இந்த கோட்-சூட் குறித்து வெளியான மற்றொரு தகவல் - அதன் விலை. இந்த ஸ்டைலிஷ் உடையின் மதிப்பு சுமார் ₹40,000 இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு அரசியல் தலைவரின் உடை குறித்து இவ்வளவு விவாதம் நடைபெறுவது அரிதான விஷயமாக இருந்தாலும், விஜய்யின் இந்த மாற்றமான அணுகுமுறை அதையே சாத்தியமாக்கியுள்ளது. இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்த பலர் உடையில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். அதிலும் அண்ணாதுரை மற்றும் காமராஜர் இருவரும் உடையில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் மற்ற முதலமைச்சர்கள் உடை தேர்வில் கவனம் வைத்தனர். அதே வகையில் இப்போது விஜய்யும் புதுமையை பின்பற்றுகிறார்.

அரசியல் நாகரீகம்
உடை மட்டுமல்லாமல், முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே விஜய் எடுத்த அரசியல் நடவடிக்கைகளும் கவனத்தை பெற்றுள்ளன. அவர் நேரில் சென்று மு.க. ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றது "நாகரீக அரசியல்" என பாராட்டப்படுகிறது.
அதிகம் பேசப்பட்ட மற்றொரு நடவடிக்கை - மதுபானக் கடைகள் குறித்தது. முதல்வராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் விஜய்.
குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் அருகில் கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூடும் இந்த முடிவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கையும்-அது அரசியல் முடிவாக இருந்தாலும், உடைத் தேர்வாக இருந்தாலும்-ஒரு புதிய மாற்றத்தை குறிக்கிறது.













Click it and Unblock the Notifications