கன்னியாகுமரியில் சினிமாவை மிஞ்சிய காதலர்கள் நடத்திய சம்பவம்.. அம்போன்னு நின்ற தாத்தா
கன்னியாகுமரி: கேரள மாநிலம் கொல்லம் பாருபள்ளி கோட்டக்காரம் பகுதியை சேர்ந்த ஜீதின் என்ற இளைஞர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள புத்தன்சந்தை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவியை காதலித்துள்ளார். மணந்தால் காதலியை தான் மணப்பேன் என்பதில் ஜீதின் உறுதியாக இருந்துள்ளார். ஆனால் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் மார்த்தாண்டம் பகுதியில் காதலி வீட்டிற்கு சென்றார் ஜீதின். அங்கு நடந்த சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பாருபள்ளி கோட்டக்காரம் பகுதியை சேர்ந்த 25 வயதாகும் ஜெயின் மகன் ஜீதின் (வயது 25) என்பவர் அங்குள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஜீதின் தாத்தாவுக்கு சில மாதம் முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது தாத்தாவை உறவினர்கள் சேர்த்தனர். அங்கு உடன் இருந்தபடி தாத்தாவை ஜீதின் கவனித்தார்.

அப்போது அந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்ற 3-ம் ஆண்டு நர்சிங் மாணவிக்கும், ஜீதினுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவியின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள புத்தன்சந்தை என்ற ஊர் ஆகும். ஜீதினும், நர்சிங் மாணவியும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தார்கள். இருவரும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் சீரியஸாக காதலிக்க தொடங்கி உள்ளார்கள். காதலியை தான் மணப்பேன் என்பதில் ஜீதின் உறுதியாக இருந்தார். தொடர்ந்து காதலியின் வீட்டுக்கு சென்று அவர் பெண் கேட்டுள்ளார். ஆனால் காதலியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதலியை கரம் பிடிக்க முடியாத வேதனையில் அங்கிருந்து கிளம்பி சென்றார். அதே சமயத்தில் போகப் போக எல்லாம் சரியாகி, காதலி தனக்கே கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் நர்சிங் மாணவியின் பெற்றோர் அவருக்கு அவசர, அவசரமாக மாப்பிள்ளை பார்க்க தொடங்கி நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்துவிட்டனர். இந்த தகவலை அறிந்த ஜீதின் துடித்து போனார்.
இதையடுத்து கடந்த 20ம் தேதி இரவு கேரளாவில் இருந்து காதலியை தேடி புத்தன்சந்தை பகுதிக்கு விரைந்தார். ஆனால் அங்கு காதலியையோ, காதலியின் குடும்பத்தினரையோ பார்க்க முடியவில்லை...காதலியை கரம்பிடித்து விட வேண்டும். அவருடன் வாழ வேண்டும் என்று நினைத்த ஜீதினுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அங்குள்ள மரத்தில் தொங்கி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஜீதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே காதலன் ஜீதின் வாழ்க்கையை முடித்துக் கொண்டதை கேள்விபட்டதும் நர்சிங் மாணவியும் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரைவிட முயற்சித்தார். இதற்காக கிருமிநாசினியை குடித்ததாக தெரிகிறது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஜீதின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலம் கடந்து வந்து காதலி வீட்டு அருகில் காதலன் உயிரை விட்ட நிலையில், காதலியும் உயிரைவிடும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications