ஆதவ் அர்ஜுனா கண்முன்னே மோதல்.. குமரி கிறிஸ்துமஸ் விழாவில் தவெக - ஏற்பாட்டாளர்கள் அடிதடி! என்ன நடந்தது?
குமரி: குமரி அருமனையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா மற்றும் மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் நடந்த கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். அப்போது அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தவெகவினர் இடையே திடீரென அடிதடி, மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள், பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடியதால் பரபரப்பு உண்டானது.
குமரி மாவட்டம் அருமனையில், ஆண்டுதோறும் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் விழா, மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக்கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அருமனை கிறிஸ்துமஸ் விழா
இதன்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது குமரி அருமனை வந்த அவர்களுக்கு தவெகவினர் மற்றும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து கிறிஸ்துமஸ் பேரணி நடந்தது.
திடீரென அடிதடி மோதல்
டிஜே இசையுடன் ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடந்த நிலையில் இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டர். கிறிஸ்துமஸ் ஊர்வலத்தின் போது திறந்தவெளி காரில் வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் வந்த காரை நாலாபுறம் சூழ்ந்த தொண்டர்கள் டிவிகே, டிவிகே என உற்சாக முழக்கமிட்டனர். அவரும் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தப்படி வந்தார். குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார்.
அப்போது அவருக்கு முன்னே ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த விஜய் ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே திடீரென அடிதடி, மோதல் உண்டானது. ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதனால் அச்சமடைந்த பெண்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் இந்த நிகழ்ச்சியில் திடீரென பரபரப்பான சூழல் உண்டானது. பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அருமனை போலீசார் அங்கு வந்ததும் நிலைமை சீரானது.
போலீசார் விசாரணை
இதையடுத்து பொதுக்கூட்ட மேடை அருகேயும் தவெக தொண்டர்கள் சிலர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், செய்தியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தவெகவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அடிதடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கினர்.
இந்த சம்பவங்களால் நேற்று இரவு அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணியை தாண்டியும் நிகழ்ச்சி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தவெகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் எம்பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை
முன்னதாக இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழில் காங்கிரஸ் எம்பிக்கள் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ராஜேஷ்கு மார், பிரின்ஸ், தாரகை கத்பட் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான திருச்சி வேலுச்சாமி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
ஆனால் தவெகவினர் பங்கேற்றதால் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ராஜேஷ்கு மார், பிரின்ஸ், தாரகை கத்பட் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. எனினும் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவரான பினுலால் சிங், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரான ரமேஷ் குமார் ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications