மீண்டும் அதிர்ச்சி.. கன்னியாகுமரி திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று மற்றொரு அதிர்ச்சி கொலை அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (38). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அந்த பகுதியில் டெம்போ ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷா ராணி. இவர் திருவட்டார் பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ஜாக்சன், தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து ஜாக்சன் அருகில் உள்ள தேவாலயம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஜாக்ஸனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜாக்சனை சரமாரியாக வெட்டியதுடன், கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாக்சன் கூச்சலிடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஜாக்சனை மீட்டு உடனடியாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜாக்சன் உயிரிழந்தார்.
திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜாக்சனை வெட்டியது வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற விலாங்கன் என்பது தெரியவந்துள்ளது. ஓர் ஆண்டுக்கு முன்பு ஜாக்சனுக்கும் ராஜ்குமாருக்கும் இடையே தகராறு நடந்து அடிதடியாக மாறி அந்த வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே ஜாக்சன் வெட்டிகொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications