முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவான பேச்சு-நாம் தமிழர் கட்சியின் முத்துராமன் மீது போலீசில் புகார்
பொன்னமராவதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி முத்துராமன் மீது பொன்னமராவதி போலீசில் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவாகப் பேசினார். இதனையடுத்து சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சாட்டை துரைமுருகன், பாஜக கல்யாண ராமன்
ஆனால் சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதங்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜகவின் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். தற்போது கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தரம் தாழ்ந்த பேச்சு
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொன்னமராவதி தொகுதி பொறுப்பாளரான மேலைச்சிவபுரி முத்துராமன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார். பொன்னமராவதி முத்துராமன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக திமுகவின் திருமயம் தொகுதி சமூக வலைதளப் பிரிவு பொறுப்பாளரான ஆலவயல் முரளி சுப்பையா, பொன்னமராவதி போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

முத்துராமன் மீது புகார்
அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரியை சேர்ந்த முத்துராமன் என்பவர் ஒலிபெருக்கி மூலம் பொது இடத்தில் பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆகையால் அவதூறாக பேசிய செயலைத் தடுக்க முத்துராமன் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி எம்.பி. செந்தில்
முன்னதாக திமுகவின் தருமபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் முத்துராமன் பேசிய வீடியோவை பகிர்ந்து, இந்த காணொளியில் பேசியவர் பெயர், ஊர், பேசிய ஊர் போன்ற விவரங்கள் தகவல்கள் தெரிந்தவர்கள் பதிவிடவும் என கேட்டிருந்தார். தருமபுரி எம்.பி. செந்திலின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. மேலும் சாட்டை துரைமுருகனின் இழிவான பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications