கன்னியாகுமரி நிர்மலா.. வங்கி அக்கவுண்டில் தான் எல்லாமே.. மொத்தமாக சிக்க வைத்த சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் திருடி வந்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணம் மீட்கப்பட்டுள்ளது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. அண்மையில் அருமனை அருகே உள்ள காரோடு பகுதியில் புதிதாக திருமணம் நடைபெற இருந்த வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றனர்.

அதைத்தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அருமனை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். கடந்த இரண்டு நாள் முன்பு அருமனை போலீசார் ரோந்து பணியில் இருக்கும் போது மஞ்சாலுமூடு சந்திப்பில் சந்தேகப்படும்படி நடமாடிய நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மாராயபுரம் காப்பிக்காடு பகுதியை சேர்ந்த 47 வயதாகும் மகேந்திர குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர், திற்பரப்பு பகுதியை சேர்ந்த 37 வயதாகும் ஜெகன் என்பவருடன் சேர்ந்து திருடியதும், மேலும் மகேந்திரகுமார் தான் திருடியதை மனைவி நிர்மலாவிடம் (43) கூறி பணத்தை கொடுத்து வந்ததும், அதை அவர் வங்கியில் சேமித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மகேந்திரகுமார், நிர்மலா, ஜெகன் ஆகிய 3 பேரையும் அருமனை போலீசார் கைது செய்தனர். இதில் மகேந்திரகுமார், ஜெகன் ஆகியோர் மீது அருமனை, பேச்சிப்பாறை, கடையாலுமூடு, திருவட்டார், பளுகல் ஆகிய போலீஸ் நிலையங்களில் 7 திருட்டு வழக்குகள் இருக்கிறது. அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகேந்திரகுமார், ஜெகன் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் 2 மாதங்களுக்கு முன்பு தான் திருட்டில் ஈடுபட்டதும், பணத்தின் மீது ஏற்பட்ட ஆசையால், வேலைக்கு செல்வதை கைவிட்டு பல இடங்களில் திருடியதும் உறுதியானது. மகேந்திரகுமார் திருடிய மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்து கொண்டு ஊர்-ஊராக சுற்றி ஜாலியாக செலவழித்து வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications