கன்னியாகுமரி வேலைக்கார பெண் பிரேமா.. 40 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. கில்லாடித்தனத்திறகு பரிசு ஜெயில்
கன்னியாகுமரி: வீட்டு வேலைக்கு ஒருவரை சேர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அவரை பற்றி முழு விவரம் தெரியாமல் சேர்த்தால், பணம், நகையை பறிகொடுக்க வேண்டிய நிலை வரலாம். அதிலும் வயதானவர்கள் மட்டுமே வாழும் வீடு என்றால், வேலைக்கு சேர்க்கும் பெண்களை கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் ஒரு சிலர் திருடுகிறார்கள். மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை மற்றும் பணம் திருடிய வேலைக்கார பெண் பிரேமா சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
வயதானவர்கள் வீட்டு வேலைக்கு பெண்கள், ஆண்களை தேடுவார்கள்.. பல்வேறு வேலைகளை செய்ய உதவியாளர்கள் தேவை என்பதால், பணம் உள்ளவர்கள் ஆட்களை வேலைக்கு சேர்க்கிறார்கள். ஆனால் விசுவாஸமாக இருக்க வேண்டியவர்கள், வேலை செய்யும் இடத்திலேயே கைவைப்பது, வேலை செய்யும் ஓனரை வலையில் விழ வைத்து பணம் பறிப்பது, சபலத்தில் சிக்க வைத்து சொத்துக்களை எழுதி வாங்குவது, சிலர் ஆட்களை தீர்த்துக்கட்டுவது என எந்த எல்லைக்கு போக ஒருசிலர் தயங்குவது இல்லை.

அதேநேரம் எல்லாரும் அப்படி இல்லை..ஆனால் வெகு சிலரே அப்படி இருக்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள் போல் கில்லாடியாக நாடகம் ஆடி பணம் பறிப்பதில் வல்லவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த 73 வயதாகும் செல்லத்துரை வனச்சரகத்தில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். வயதான தம்பதியான இவர்கள், இறுதி காலத்தில் தங்களுக்கு உதவியாக வீட்டு வேலைக்கு கன்னியாகுமரி மாவட்டம் மாங்கரையை சேர்ந்த பிரேமா (46) என்ற பெண்ணை அமர்த்தியிருந்தார்கள்.
பிறகு அவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டார். இந்தநிலையில் செல்லத்துரை நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வீட்டில் உள்ள பீரோ லாக்கரை திறந்து பார்த்த போது, அதிலிருந்த 40 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரத்து 500 மாயமாகியிருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டுக்குள் புகுந்து திருடியது யார்? என்பதற்கான அடையாளமே தெரியாமல் இருந்தது. உடனே இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக துப்பு துலக்க சப்-இன்ஸ்பெக்டர் இந்துசூடன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதில் செல்லத்துரையின் வீட்டில் வேலை செய்து விட்டு இடையில் நின்ற பிரேமா மீது தனிப்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்ததில், முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர், செல்லத்துரை வீட்டில் திருடியதை பின்னர் ஒப்பு கொண்டார்.
செல்லத்துரை பீரோவை சரியாக பூட்டுவது இல்லை எனத்தெரிகிறது. இதை சாதகமாக பயன்படுத்திய பிரேமா, பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் பணத்தை நைசாக திருடிக் கொண்டார் அதன் பிறகு அவர் வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டாராம். விசாரணை முடிவில் பிரேமாவை போலீசார் கைது செய்தனர். முதற்கட்டமாக அவரிடம் இருந்து 2 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. மீதி நகைகள், பணத்தை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கைதான பிரேமாவை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications