கன்னியாகுமரி பஸ்ஸில் பழக்கம்.. வீடு தேடி வந்த பெண்.. சாந்தி குளிர்பானம் குடித்ததுமே பெரிய சம்பவம்
கன்னியாகுமரி: நமது ஊர் கிராம மக்களிடம் ஒரு வழக்கம் உள்ளது.. யார் என்னவென்று கேட்காமல் வெள்ளந்தியாக எல்லாவற்றையும் பேசுவார்கள். பேருந்தில் உடன் செல்பவர்களிடம் என்ன தகவல் கேட்டாலும் உடனே கூறுவார்கள். பேருந்தைவிட்டு இறங்குவதற்குள் நட்பாகி குடும்ப விவகாரங்கள் வரை பேசுவார்கள். அப்படி பேசிய கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கொடுத்த விலை மிக அதிகம்... குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்..
கிராமங்களிலோ, நகரங்களிலோ வசிப்பவர்கள் யாராக இருந்தாலும், நமக்கு தெரியாதவர்களிடம் குடும்ப விவகாரங்களை கூறவே கூடாது. ஏனெனில் அவர்கள் அதை வைத்து உடனுக்குடன் திட்டம் தீட்டி பணம், நகை பறிப்பவர்களாக இருக்கலாம். பஸ்ஸில் பழகிய பெண்ணிடம் நட்பாக பழகியதால், சாந்தி என்ற மூதாட்டி தங்க நகைகளை இழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நடந்துள்ளது. ஆனால் நல்ல வேளையாக போலீசார் சரியாக விசாரணை நடத்தி திருடிய பெண்ணை கண்டுபிடித்ததுடன், நகைகளையும் மீட்டு விட்டார்கள். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த மூதாட்டி சாந்தி. சாந்திக்கு 61 வயது ஆகிறது. இவரது கணவர் ஏற்கனவே உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். சாந்திக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் மூதாட்டி சாந்தியின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
மூதாட்டி சாந்தி கடந்த நவம்பர் மாதம் 2-ந் தேதி நாகர்கோவிலுக்கு சென்று விட்டு பஸ்சில் சுசீந்திரம் அருகே உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் சேலையை தலையில் முக்காடு போட்டு அணிந்த பெண் அமர்ந்திருந்தார். அவர் சாந்தியின் குடும்ப நிலவரத்தை அக்கறையாக விசாரித்தார்.
அப்போது சாந்தி எதார்த்தமாக குடும்ப விவகாரங்களை கூறியுள்ளார். நட்பாக பேசிய அந்த பெண், எல்லா தகவலையும் அக்கறையாக கேட்டு பேசியிருக்கிறார். இதனால் சாந்தி தனது கணவர் இறந்ததை கூறியிருக்கிறார். மகன், மகள் என யாரும் உடன் இல்லை என்பதையும் கூறியிருக்கிறார். அப்போது அந்த பெண், நலவாரியத்தில் இருந்து விதவை உதவித்தொகை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அத்துடன் அதற்காக விண்ணப்பம் செய்ய தேவையான ஆவணங்களை வாங்குவதற்காக வீட்டிற்கு வருவதாக அந்த பெண் கூறியிருக்கிறார். அதன்படியே சாந்தியுடன் பேருந்திலிருந்து இறங்கி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் அந்த பெண்.
வீட்டிற்கு சென்றதும் தான் வைத்திருந்த குளிர்பானத்தை சாந்திக்கு அந்த பெண் குடிக்க கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மூதாட்டி சாந்தி மயக்கம் அடைந்தார். சிறிது நேரம் கடந்து சாந்தி கண்விழித்து பார்த்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல், மாட்டி மற்றும் பீரோவில் இருந்த வளையல், தங்க சங்கிலி என மொத்தம் 8.5 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனை காணவில்லை. அவற்றை அந்த பெண் திருடிச் சென்றது அப்போது தான் சாந்திக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக சென்று நடந்த விஷயங்களை கூறி, சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மற்றும் பேருந்து பகுதிகளை ஆய்வு செய்தனர். மயக்க மருந்து கொடுத்து நகையை திருடிய அந்த பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை, காவலாகுளத்தை சேர்ந்த ராஜகுமரன் மனைவி கிரிஜா (54) என்பவரை பிடித்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சாந்தியிடம் இருந்து 8.5 பவுன் தங்க நகையை திருடியதை கிரிஜா போலீசிடம் ஒப்புக்கொண்டார்.
கிரிஜாவை பிடித்து விசாரித்த போது,கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பெண்களிடம் கடந்த 15 வருடங்களாக கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை மீட்டனர். கிரிஜா இதுவரை எங்கெல்லாம் திருடினார். வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications