பீரோவில் "தங்க பிரேஸ்லெட்".. சிறுவன் வாயை பார்த்து அலறிய கன்னியாகுமரி.. குளச்சலில் இப்படியொரு பெண்?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம், அம்மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. கிட்டத்தட்ட இரண்டரை வருடம் கழித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.. குளச்சலில் இப்படியொரு தம்பதியா? அதிலும் அந்த பெண்ணுக்கு ஈவு இரக்கமே இல்லையா? என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்? என்ன நடந்தது குளச்சலில்? யாரிந்த பெண்? பத்மநாபபுரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
இந்த சம்பவம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ளது கடியபட்டணம்.. இங்கு வசித்து வருபவர் ஜான் ரிச்சர்டு.. இவர் சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் சகாய சில்ஜா.. 28 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஜோகன் ரிஷி என்ற 4 வயது மகன் இருக்கிறான்.. கடந்த 2023 ஜனவரி 21ம் தேதி, வீட்டுக்கு பக்கத்தில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான்.. அப்போது சகாய ரிஷ, மகனை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றுள்ளார்.. ஆனால், விளையாடி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை.
அரைஞாண் கயிறு
இதனால் பதற்றமடைந்த சகாய சில்ஜா, அக்கம் பக்கம் வீடுகளில் குழந்தையை தேடியிருக்கிறார்.. பிறகு அந்த பகுதியிலுள்ள உறவினர் வீடுகளிலும் தேடியிருக்கிறார்.. எங்குமே குழந்தையை காணவில்லை என்பதால், பயந்துபோன சகாய சில்ஜா, மணவாளக்குறிச்சி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.. தன்னுடைய மகனை கண்டுபிடித்து தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்..
இதையடுத்து, இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. மாயமான சிறுவன் குறித்து விசாரிக்கும்போது, கழுத்தில் ஒன்றரை சவரன் தங்க சங்கிலி, அரை சவரன் பிரேஸ்லெட், வெள்ளியில் அரைஞாண் கயிறு அணிந்திருந்தது தெரியவந்தது.. இதனால், நகைக்காக மர்ம நபர்கள் யாராவது சிறுவனை கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்..
நடத்தையில் சந்தேகம்
தெருவில் விளையாடிய குழந்தை காணாமல் போனதால், அக்கம் பக்கத்தினர் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.. அந்த பகுதியினரிடமும் விசாரித்தனர்.. அப்போதுதான், பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற 35 வயது பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக அந்த பகுதி மக்களே சொன்னார்கள்..
இதையடுத்து, போலீசார் பாத்திமாவையும், அவரது கணவர் 37 வயதான சரோபினையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்... அப்போது பாத்திமா முன்னுக்கு பின் முரணாக உளறி கொட்டினார்.. இதனால் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான் நகைக்காக சிறுவனை கொன்றதாக வாக்குமூலம் தந்தார்..
வாயில் துணியுடன் சிறுவன்
அதாவது சிறுவன் தெருவில் விளையாடி கொண்டிருந்தபோது, வீட்டிற்கு அழைத்து வந்து, பீரோவில் வைத்து பூட்டிவிட்டதாக கூறினார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பீரோவை திறந்தபோது, சிறுவனின் சடலத்தை கண்டு மிரண்டனர்..
சிறுவனின் கழுத்தில் காயங்களும் இருந்தன. சிறுவனின் வாயும் கையும் துணியால் கட்டப்பட்டிருந்தது.. பாத்திமாவின் கணவரும் குற்றத்தில் தொடர்புடையவராக இருந்து, சடலத்தை மறைக்க உதவியதாக தெரியவந்தது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த கொலை வழக்கில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சகாய சரோபின் கைது செய்யப்பட்டனர். இதில் தக்கலை பெண்கள் ஜெயிலில் பாத்திமா அடைக்கப்பட்டார்.. பிறகு குண்டர் சட்டமும் இவர் மீது பாய்ந்தது.. கணவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்..
இது குறித்து குளச்சல் காவல் ஆய்வாளராக இருந்த அருள் பிரகாஷ், கூடுதல் பொறுப்பாக வழக்கை தீவிரமாக விசாரித்து, வழக்கை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 34, 201, 302, 342, 364, 369, 379 போன்ற பிரிவுகளுக்கு மாற்றி இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்.
இருவருக்குமே தண்டனை
இந்த வழக்கின் விசாரணை கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்மநாபபுரம் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ராமச்சந்திரன் பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், தடயங்களை அழித்து சடலத்தை மறைத்த குற்றத்துக்காக கணவர் சகாய சரோபினுக்கு 3 வருடம் சிறைத்தண்டனையும்,ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்... அரசு வக்கீல் ஜெகதேவ் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்தை இந்த தண்டனை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications