கன்னியாகுமரியில் ஒரு முருங்கைகாய் ஐந்து லட்சம்.. ஜூஸ் கொடுத்து வேலையை காட்டிய பெண்.. தேடும் போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாவூரில் அந்தோணிமுத்து மற்றும் எமிலெட் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்கள் ஏரியாவிற்கு ஒரு பெண் முருங்கைக்காய் விற்பது போல் வந்தார். இந்த தம்பதியிடம் இனிக்க இனிக்க பேசியதுடன், குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தம்பதியை மயக்கி 6.5 பவுன் தங்க நகையை பெண் பறித்து சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாவூரை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவர் விவசாயி ஆவார். இவருடைய மனைவி எமிலெட் (வயது 55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். மகளுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது.

போனை எடுக்கவில்லை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மகள் தனது அம்மாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் எடுக்கவில்லை. அப்பாவிற்கும் அழைத்துள்ளார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. இதனால் பயந்து போன அவர், பெற்றோர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தந்தையும், தாயும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
உடனே அவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த போது தான் மயக்க மருந்து கொடுத்து யாரோ தூங்க வைத்தது தெரியவந்தது. அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது போலீசாரிடம் அந்தோணிமுத்து, எமிலெட் தம்பதி கூறுகையில், தங்கள் வீட்டிற்கு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முருங்கைக்காய் வேணுமா? என கேட்டபடி வந்தார்.
இனிக்க இனிக்க பேச்சு
அப்போது எங்கிகளிடம் அந்த பெண் இனிக்க, இனிக்க பேசினார். இதனால் நாங்களும் அவரை நம்பி பேச்சு கொடுத்தோம். ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த குளிர்பானத்தை குடிக்கும்படி பெண் எங்களை வற்புறுத்தினார். அதனை நாங்களும் குடித்தோம். ஆனால் அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை அந்த பெண் கலந்தது தெரியாது. இதனை அறியாமல் குடித்ததும் மயக்கம் அடைந்தோம்.
தங்க நகை பறிப்பு
பின்னர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் தங்க நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்" இவ்வாறு விசாரணையில் கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் மர்ம பெண் யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகிறார்கள். முருக்கைக்காய் வாங்க ஆசைப்பட்ட தம்பதியிடம் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பெண் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications