கேரளா, குமரியில் களை கட்டிய ஓணம் பண்டிகை.. அத்தப்பூ கோலம் அசத்தல்..குவியும் ஆர்டர்கள்
கன்னியாகுமரி: ஓணம் பண்டிகையையொட்டி குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் விற்பனை களைகட்டி வருகிறது. கேரளாவுக்கு தினசரி 50 டன் விற்பனையாகிறது. வரும் 8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கேரள வியாபாரிகள் ஆர்டர் மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தோவாளை பூ வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வாமன அவதாரமாகவும் கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. கேரளா மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் இடமெங்கும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஓண பண்டிகையானது கடந்த 30ம் தேதி தொடங்கியது.
ஓணம் பண்டிகை..ஹஸ்தம் தொடங்கி திருவோணம் வரை கோலாகலம்..மகாபலி மன்னனை வரவேற்க தயாராகும் கேரளா
மகாபலி மன்னன்
ஆண்டுதோறும் ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.
களைகட்டும் பண்டிகை
கேரளாவை ஒட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் களைகட்ட தொடங்கிவிட்டது. வீடுகளில் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும், தெருக்களில் ஊஞ்சல் கட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தொடங்கி விட்டனர். ஓணத்திற்கான மலர்கள் அனைத்தும் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டில் தினசரி பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலையே மார்க்கெட்டில் குவியும் உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு பூக்கள் வாங்குகின்றனர்.
பூக்கள் விற்பனை
அந்த வகையில் தினசரி 50 டன் பூக்கள் கேரளாவுக்கு விற்பனையாகின்றன. மற்ற நேரங்களில் தினமும் 10 டன் தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓணத்திற்கான பூக்கள் விற்பனை தோவாளை மார்க்கெட்டை கடுமையாக பாதித்தது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் கடும் மனவேதனை அடைந்தனர். ஆனால் தற்போது கொரோனா குறைந்து கட்டுபாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இந்தாண்டு பழையது போல் மீண்டும் தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்ட தொடங்கி விட்டது.
குவியும் ஆர்டர்கள்
இந்தநிலையில் வரும் 8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கேரள வியாபாரிகள் ஆர்டர் மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தோவாளை பூ வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த முறை திருவோணத்திற்கு 200 டன் முதல் 250 டன் வரை பூக்கள் கேரளாவிற்கு விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பூக்கள் விலை உயர்வு
பூக்கள் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1,800க்கும், பிச்சி ரூ.800க்கும், வாடாமல்லி ரூ.200க்கும், சம்பங்கி ரூ.150க்கும், அரளி ரூ.300க்கும், பட்டன் ரோஸ் ரூ.250க்கும், பாக்கெட் ரோஸ் ரூ.50க்கும், மஞ்சள் கிரேந்தி ரூ.60க்கும், ஆரஞ்சு கிரேந்தி ரூ.70க்கும் என்று விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமான உயர்ந்து உள்ளது.