மோடி தியானம்.. விவேகானந்தர் மண்டபம் போக முடியலையா? குமரியில் இந்த இடங்களை எல்லாம் மிஸ் பண்ணாதீங்க
கன்னியாகுமரி: பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை வரை நீடிக்கும் நிலையில் கன்னியாகுமரி செல்வோர் பார்க்க வேண்டிய பிற இடங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். நாளை வரை பிரதமர் மோடி அங்கு இருப்பார்.

விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி 45 மணிநேர தியானத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் கன்னியாகுமரியில் சுற்றுலா சென்றுள்ள மற்றும் சுற்றுலா செல்ல விரும்பும் மக்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களின் விபரம் வருமாறு:
காந்தி - காமராஜர் மண்டபம்: கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபம் உள்ளது. காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் காமராஜர் நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. காமராஜரின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கடற்கரைகள்: முட்டம் கடற்கரை என்பது நாகர்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சூரிய அஸ்தமனத்தை பார்க்க சிறந்த இடமாக முட்டம் கடற்கரை அமைந்துள்ளது. அடுத்ததாக தேங்காய்ப்பட்டினம் கடற்கரை. இது கன்னியாகுமரியில் இருந்த 50 கிலோமீட்டர் தொலைவில் விளவங்கோடு அருகே பைங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. மேலும் சொத்தவிளை கடற்கரை கன்னியாகுமரியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதுவும் விடுமுறையை கழிக்க சிறந்த இடமாகும்.
பத்மநாபபுரம் அரண்மனை: திருவாங்கூரை ஆட்சி செய்த இறவி வர்மா குலசேகரபெருமாள் ம்னரால் 1601ல் இந்த அரண்மனை கட்டப்பட்டது. பத்மநாபபுரத்தில் உள்ள இந்த அரண்மனை திருவனந்தபுரத்தில் இருந்து 70 கிலோமீட்டரிலும், நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திங்கட்கிழமை அரண்மனைக்கு விடுமுறை தினமாகும்.
திற்பரப்பு நீர்வீழ்ச்சி: இது அனைவருக்கும் தெரிந்த இடம். இந்த நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்த 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தற்போது தண்ணீர் வரத்து உள்ளதால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியும்.
மாத்தூர் தொட்டிப்பாலம்: கன்னியாகுமரியில் இருந்த 45 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இரந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் ஆசியாவின் மிக உயரமான தொட்டிப்பாலம் உள்ளது. இதன் மொத்த உயரம் 115 அடியாகும். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு தொட்டிப்பாலம் அமைகிறது.
அணைக்கட்டுகள்: மேலும் பேச்சுப்பாறை அணைக்கட்டு, பெருஞ்சாணி அணைக்கட்டுகளை பார்க்க செல்லலாம். பேச்சுப்பாறையில் படகு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அணைக்கட்டுக்கு செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்களை கவனமாக அழைத்து செல்ல வேண்டும்.
கோவில்கள்: ஆன்மிகத்தில் நாட்டம் இருந்தால் கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், நாகராஜா பூஜைக்கு என்று பிரத்யேகமாக கட்டப்பட்ட நாகர்கோவில் நாகராஜா கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குகநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்யலாம். அதேபோல் ஜைன மத கோவிலான சிதறால் குகை மலைக்கோவிலிலும் தரிசனம் செய்யலாம். இந்த ஜைன மத கோவில் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
சர்ச் - தர்கா: கிறிஸ்தவர்கள் என்றால் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்துக்கும், இஸ்லாமியர்கள் என்றால் தக்கலை பீர் முகமது தர்காவுக்கு செல்லலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாவட்ட சுற்றுலா அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம். மாவட்ட சுற்றுலா அதிகாரியை 04652-246276, 91769 95866 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications