அட.. இரணியலில் ஒற்றை ஓட்டு வாங்கியது திமுக வேட்பாளரே இல்லையாம்.. விவரம் தெரியாமல் ட்ரோல் செய்த பாஜக
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் திமுகவை விட்டு சுயேச்சையாக களமிறங்கிய அக்கட்சி பிரமுகர் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‛ஒற்றை ஓட்டு திமுக முருகன்'என டிரென்ட் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடந்தது. இதில் 60.7 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திமுக மாபெரும் வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக உள்பட பிற கட்சியினருக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்காதது இந்த தேர்தலில் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இதனால் அந்த கட்சியினர் குறைந்த வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் சுவாரசியங்கள்
ஒவ்வொரு முறையும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சில சுவாரசியமான விஷயங்கள் நடப்பது வழக்கம். ஒற்றை ஓட்டுகளால் ஒருவரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலையில், சில பேர் வெறும் ஒரு ஓட்டுகளை மட்டும் தேர்தலில் பெற்று படுதோல்வி அடைவதும் உண்டு. இதுபோன்ற விஷயங்கள் தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலும் ஆங்காங்கே நடந்துள்ளது.

ஒற்றை ஓட்டு திமுக
இந்நிலையில் தான் ‛ஒற்றை ஓட்டு திமுக' என முருகன் என்பவர் சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகி வருகிறார். இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுகவின் வேட்பாளருக்கு இந்த நிலையா என்ற கேள்வி எழுந்ததுது. யார் இந்த முருகன், இரணியல் தொகுதியில் நடந்தது என்ன என்பது பற்றிய முழுதகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

திமுகவில் போட்டியிட விருப்பம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி 4வது வார்டில் திமுக பிரமுகர் முருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதற்காக கட்சியில் விருப்ப மனு செய்தார். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இந்த வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் முருகன் விரக்தி அடைந்தார். அத்துடன் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கைவிடவில்லை.

சுயேச்சையாக போட்டி
இதனால் முருகன், இரணியல் பேரூராட்சி நான்காவது வார்டில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் வார்டு கவுன்சிலராக இருந்ததால் அந்த செல்வாக்கு கைக்கொடுக்கும் என நினைத்தார். அவரது வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் பிரசாரம் செய்து தேர்தல் பணியை மேற்கொண்டார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது.

ஒரே ஒரு ஓட்டு மட்டுமே
இதில் முருகன் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருந்தார். அதுவும் அவரே அவருக்காக போட்டு கொண்ட ஓட்டாகும். முருகனுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திமுக கட்சியினர் என யாரும் ஓட்டு போடவில்லை என்பது வெட்டவெளிச்சமானது. இதனால் தான் ‛ஒற்றை ஓட்டு திமுக' என முருகன் சமூக வலைதளங்களில் டிரென்ட்டாகி வருகிறார்.

இதற்கு முன் யார் யார்
முன்னதாக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்றைய ஓட்டு எண்ணிக்கையின்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது. அதற்கு முன்பு கடந்த ஆண்டு கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் வெறும் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றார்.












Click it and Unblock the Notifications