அரசியலே இந்த வார்த்தைகளை சுற்றித் தான்! அதை பேசக்கூடாது என்றால் வேறு எதை பேசுவது? -தமிமுன் அன்சாரி
கன்னியாகுமரி: எம்.பி.க்களின் குரல் வளையை நெரிக்கக் கூடிய வகையில் நாடாளுமன்ற செயலகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சாடியுள்ளார்.
அதை பேசக்கூடாது இதை பேசக்கூடாது என்றால் வேறு எதை பேசுவது என அவர் வினவியுள்ளார்.
கன்னியாகுமரியில் தனது கட்சியின் புதிய மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

முட்டாள்தனம்
''ஜூலை 18 அன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று ஒரு பட்டியலை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது. ஊழல், சர்வாதிகாரம், வெட்கக்கேடு, பாலியல், துரோகம் செய்தார், நாடகம், திறமையற்றவர், முட்டாள் தனம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.''

குரல் வளையை
''இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் வளையை நெரிக்கக் கூடியது, ஜனநாயக விரோதமானது. அரசியலே இந்த வார்த்தைகளை சுற்றி தான் நிகழ்கிறது. இந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்றால் வேறு எந்த வார்த்தைகளில் எதை பேசுவது? அப்படியெனில், ஆளுங்கட்சியை புகழ்ந்து மட்டும் தான் பேச முடியும்.''

மாற்று வார்த்தைகள்
''இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றால் இதற்கு மாற்று வார்த்தைகள் என்ன என்பதை கூற வேண்டும். இலங்கை மக்கள் நடத்திய புரட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அது ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வெறுப்பு அரசியலை, பிரிவினை அரசியலை தூண்டுபவர்களுக்கும், வளர்ச்சி அரசியலை மறைத்து திசை திருப்புவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.''

இலங்கை மக்களுக்கு
''எனவே இலங்கை மக்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தென் மாவட்டங்களில் நிகழும் கனிம வளக் கொள்ளை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.'' இவ்வாறு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications